ஸ்ரீலங்கா காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் வாடிக்கையாளர்களின் வைப்புப் பணத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட 6 பில்லியன் ரூபாய் திறைசேரிப் பிணைமுறி முதலீட்டு விவகாரத்தினால், கூட்டுத்தாபனத்திற்கு 536 மில்லியன் ரூபாய் நிகர நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழல் எதிர்ப்பு முன்னணியின் அமைப்பாளர் நிரோஷன் பாதுக்க குற்றம் சாட்டியுள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முதன்மைக் காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இக்குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:-
“ஸ்ரீலங்கா காப்புறுதிக் கூட்டுத்தாபனம் 6 பில்லியன் ரூபாய் திறைசேரிப் பிணைமுறியைக் கொள்வனவு செய்த விவகாரத்தை ஐக்கிய மக்கள் சக்திதான் முதன்முதலில் நாட்டுக்கு வெளிப்படுத்தியது.
கடந்த பெப்ரவரி மாதம் முதல் சந்தையில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் என்று எங்களது பொருளாதாரக் குழு ஏற்கனவே எச்சரித்திருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில், சோமதாச பலிஹவடன, முதன்மை நிறைவேற்று அதிகாரி நலின் சுபசிங்க மற்றும் ஸ்ரீயானி குலசிங்க ஆகிய மூவரும் இணைந்து, காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் வாடிக்கையாளர்கள் வைப்புச் செய்த பணத்தைப் பயன்படுத்தி இந்த 6 பில்லியன் ரூபாய் முதலீட்டைத் தன்னிச்சையாக மேற்கொண்டனர்.
தவறான நிதி முகாமைத்துவம் மற்றும் முறைகேடான இந்த முதலீட்டின் காரணமாக காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்டுள்ள நிகர நட்டம் 536 மில்லியன் ரூபாயாகும்.
எனவே, பொதுமக்களின் பணத்திற்கு நட்டத்தை ஏற்படுத்திய இந்தப் பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக உடனடியாகத் தராதரமின்றிச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்திக் கோரிக்கை விடுக்கின்றது.
கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் இணைந்து கொண்டு நாட்டைச் சூறையாடிய அதே ஊழல் கும்பல், இப்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சுற்றியும் வலம் வந்துகொண்டிருக்கின்றது.
இவர்களின் இத்தகைய மறைமுக ஏமாற்று வேலைகளினால் நாடு மீண்டும் ஒருமுறை வங்குரோத்து நிலையை நோக்கியே தள்ளப்படும் என எச்சரிக்கின்றோம்.
அதேநேரம், ஐக்கிய மக்கள் சக்தியினுள் இயங்கும் ‘நிழல் அமைச்சரவை’ மூலம் தற்போதைய அரசாங்கத்தின் பல ஊழல்கள் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, கொள்கலன் மோசடி, திறைசேரி மோசடி, தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி மோசடி மற்றும் சொகுசு வாகன இறக்குமதி மோசடி உள்ளிட்ட பல பில்லியன் ரூபாய் ஊழல்களை எமது நிழல் அமைச்சரவை ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்குக்கொண்டு வந்துள்ளது.
எமது நிழல் அமைச்சரவையினரால் திரட்டப்படும் இவ்வாறான உத்தியோகபூர்வத் தகவல்களை, ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழல் எதிர்ப்பு முன்னணி தொடர்ந்து மக்களுக்குப் பகிரங்கப்படுத்தும். தற்போதைய அரசாங்கத்தின் முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறித்த இரகசியத் தகவல்கள் எமக்கு தினசரி கிடைத்து வருகின்றன.” – என்றார்.










