உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்த போதிலும் இலங்கையில் நிறுவனங்களின் மாஃபியாக்கள் மற்றும் ஊழல்கள் காரணமாகவே எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி பலத்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கூட்டு எதிர்க்கட்சி சார்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட நவ ஜனதா பெரமுனவின் தலைவர் சுகீஸ்வர பண்டார இக்குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்நிகழ்வில் ஜனதா சேவக கட்சியின் தலைவர் ஜகத் விஜேசேகர மற்றும் லங்கா சமசமாஜ கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவர் பேஷல செனசிங்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இங்கு சுகீஸ்வர பண்டார மேலும் தெரிவித்ததாவது:-
“தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம், கடந்த எட்டு மாத கால ஆட்சிக்குள் எதிர்மறையான பல ‘கின்னஸ் சாதனைகளைப்’ படைத்துள்ளது.
இலங்கைக்குத் தரமற்ற மற்றும் சாம்பல் நிறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்தமை, அதிக விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்தமை மற்றும் மின்வெட்டை மேலாண்மை செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட பில்லியன் கணக்கான டொலர் நஷ்டத்தை ஈடுசெய்யவே அரசாங்கம் தற்போது எரிபொருள் விலையைக் குறைக்காமல் அதிகரித்துள்ளது.
தெற்காசியாவிலேயே அதிக விலைக்கு எரிபொருளை விற்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது.
கடந்த பெப்ரவரி 28 முதல் மே 31 வரையான காலப்பகுதியில், உலகிலேயே அதிக சதவீதத்தால் டீசல் மற்றும் பெட்ரோல் விலையை அதிகரித்த நாடாக இலங்கை பதிவாகியுள்ளது.
இதன்படி, இலங்கையில் டீசல் விலை 38.9 வீதமாகவும், பெட்ரோல் விலை 27.6 வீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஈரான் – இஸ்ரேல் யுத்தம் காரணமாகவே விலை அதிகரிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் பொய்யான சாக்காகும்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இரு வாரங்களுக்கு முன்னர் நாட்டில் இரு வாரங்களுக்குரிய எரிபொருளே உள்ளதாகக் கூறியிருந்தார்.
அப்போது உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் 94 டொலராக இருந்தது.
தற்போது விலை மேலும் குறைந்துள்ள நிலையிலும் உள்நாட்டில் விலையை அதிகரிப்பது, தற்போதைய அரசாங்கத்திற்கும் அதன் பாடவிதான அமைச்சருக்கும் விலைக்கட்டுப்பாடு குறித்து எந்தவொரு முறையான புரிதலும் இல்லை என்பதையே காட்டுகிறது.
அன்று காஞ்சன விஜேசேகரவின் கணக்கிற்குத் தரகுப் பணம் செல்வதாகக் குற்றம் சாட்டியவர்கள், இன்று தனியார் நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் சட்டவிரோத தரகுப் பணம் ‘பெலவத்தைக்கு’ (ஜே.வி.பி. தலைமை அலுவலகம்) செல்வது குறித்து மௌனம் காப்பது ஏன்? இந்தத் தரகுப் பணம் யாருக்குச் செல்கிறது என்பதை அரசாங்கம் உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும்.
அத்துடன், தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திற்கு நாட்டை முழுமையாகக் காட்டிக்கொடுத்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இருந்திருந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு இவ்வாறு ஆடியிருக்க மாட்டார்.
நாட்டின் பணவீக்கம் 7 வீதமாக உயர்ந்துள்ள நிலையில், பொருளாதாரம் முறையாக நிர்வகிக்கப்படாமல் தற்காலிக தீர்வுகளையே அரசாங்கம் நம்பியிருக்கிறது.
சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டுமாயின், ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களின் அனுபவ ரீதியான ஆதரவை அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த எரிபொருள் விலை அதிகரிப்பின் சங்கிலித் தொடர் விளைவாக, ஒரு ‘பிளேன்டி’ மற்றும் தேநீர் முதல் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், இன்று நாட்டில் ஒரு ‘பொலிஸ் ராஜ்யமே’ நிலவுகிறது.
அன்று ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் ஆட்சியில் இருந்தபோது கூட இப்படி ஒரு பொலிஸ் ராஜ்யம் இருக்கவில்லை.” – என்றார்.










