2018-ல் இருந்து 2022 வரையான காலப்பகுதிக்குள் தேரர்கள் சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்த 488 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட முஸ்லிம் பெண்கள் நம்பிக்கை நிதிய பணிப்பாளர் ஜுவைரியா முகைதீன் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக அதிகாரம் மிக்க சமய தலைவர்களால் நடைபெறும் பாலியல் ரீதியான அநீதிகள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு எதிராக கண்டனத்தையும் நீதிக்கான கோரிக்கையையும் வெளிப்படுத்தும் வகையில் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் கண்டனப் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இப் பேரணி இடம் பெற்றது.
இதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனுராதபுரத்தில் 13 வயது சிறுமிக்கு ஏற்பட்ட இந்த அநீதிக்கு, பாலியல் வல்லுறவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது இலங்கையில் இருக்கும் அத்தனை ஆண், பெண்களுடைய கடமையுமாகும்.
போராட்டத்தில் முழுமையாக பங்கு பெறும்போது தான் எங்களுக்கான மாற்றத்தையும், வெற்றியையும் அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்.
அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருத்தரால் நடத்தப்பட்ட இந்த சம்பவத்துக்கு உடனடியாக அவருக்கு தண்டனை வழங்க வேண்டும்.
இருந்தபோதிலும், அவருக்கான தண்டனையில் இருந்து அவருக்கு பிணை கிடைத்தது மிகவும் மனவேதனையும், வருத்தமாக உள்ளது.
அதே நேரத்தில், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் 2018-ல் இருந்து 2022 வரையான காலப்பகுதிக்குள் தேரர்கள் மூலம் சிறுவர்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட 488 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதனால் வேதனையான விஷயம் என்னவென்றால், இவ்வாறான ஆட்களுக்கு சார்பாக வாதாட நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் தயாராக உள்ளனர்.
அவர்களுக்கு எதிராகத்தான் நாங்கள் முதலில் குரல் கொடுக்க வேண்டும்.
ஏனென்றால், அவர்களுக்கு பிள்ளைகள் இல்லையா? அவர்களுக்கு பெண்கள் இல்லையா? இந்த வேதனை, வலி அவர்களுக்கு வராதா?
மன்னாராக இருந்தாலும் சரி, புத்தளமாக இருந்தாலும் சரி, இலங்கையில் எந்த நீதிமன்றத்திலும் இவ்வாறான வல்லுறவு அல்லது பாலியல் கொடுமை ஏற்படும் போது, சட்டத்தரணிகள் அவ் வழக்குக்கு சார்பாக முன்னிலையாகக் கூடாது என்பதை இந்த தருணத்தில் மிகவும் வேதனையோடும், வலியோடும் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் மேலும் குறி்ப்பிட்டுள்ளார்.










