2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு 109 மேலதிக வாக்குகளால் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இன்று மாலை 6.10 மணிக்கு இடம்பெற்ற இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பில் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 155 வாக்குகளும், எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இந்த வாக்கெடுப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்கேற்கவில்லை.
2025 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது ‘வரவு செலவுத் திட்ட உரை’ நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் கடந்த 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பெப்ரவரி 18ஆம் திகதி முதல் இன்று (25) வரை, 7 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு – செலவுத் திட்டம்) மீதான இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது.
இதற்கு அமைய குழு நிலை விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 19 நாட்கள் இடம்பெறவுள்ளது.
இதற்கு அமைய 2025 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு மார்ச் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.