கந்தானை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (11) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் பொரளை, சஹஸ்புர பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
போதைப்பொருளை கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, கந்தானை ரயில் நிலைய வீதியில் உள்ள ஒரு சர்வதேச பாடசாலைக்கு முன்னால் அவசர வீதித் தடையைப் பயன்படுத்தி ஒரு மோட்டார் வாகனத்தை சோதனை செய்தபோது, சாரதியிடம் இருந்து ஒரு கிலோ எட்டு கிராம் கொண்ட ஒரு கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருள் அடங்கிய பார்சல்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர், குறித்த சந்தேக நபரை கைது செய்து விசாரித்ததில், அந்தப் போதைப்பொருள், வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்று தற்போது தலைமறைவாக உள்ள பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான மோதரா நிபுனவுக்குச் சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.
