முள்ளிக்குளம் கிராமத்தில் இருந்து மறிச்சிக்கட்டி பூக்குளம் ஊடாக பள்ள கண்டல் அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லும் பாதையை வழிபாடுகளுக்காக திறந்து விடக்கோரி முள்ளிக்குளம் மக்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை (6) காலை முள்ளிக்குளம் பிரதான பாதையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
பள்ள கண்டன் புனித அந்தோனியார் ஆலய கொடியேற்றம் யூலை மாதம் 8 ஆம் திகதி இடம் பெற்று தொடர்ந்து நவநாள் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு யூலை மாதம் 12ஆம் திகதி திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படுகின்றமை வழமை.
கடந்த காலங்களில் தொடர்ச்சியாக திருவிழா திருப்பலி இடம் பெற்று வந்த நிலையில் மக்கள் எவ்வித அசௌகரியங்கள் இன்றி குறித்த பாதையூடாக பள்ளங்கண்டல் அந்தோனியார் ஆலயத்திற்கு சென்று வந்தனர்.
மன்னார் மாவட்டத்தையும் வட மாகாணத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த கத்தோலிக்க மக்கள் நீண்ட காலமாக பள்ள கண்டல் ஆலய திருவிழாவுக்கு சென்று வருகின்றமை வழமை.
இந்த நிலையில் தற்போது மன்னார் முள்ளிக்குளம் இருந்து மறிச்சிக்கட்டி பூக்குளம் வழியாக பள்ள கண்டல் ஆலயத்திற்கு செல்ல வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அனுமதி மறுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாதையூடாக தாம் பள்ளகண்டல் ஆலயத்திற்கு செல்ல 30 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும்.தற்போது தம்மை அனுராதபுரம் பாதையூடாக செல்லுமாறு கூறுவதாகவும் அப்படி சென்றால் 250 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் தெரிவித்தனர்.
அரசாங்கம் உரிய குறித்த விஷயத்தில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து முள்ளிக்குளம் கிராம மக்கள் இன்று (6) திங்கட்கிழமை காலை 11 மணியளவில் முள்ளிக்குளம் பிரதான வீதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தில் முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை டெரன்ஸ் குளாஸ்,மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ,பணியாளர்கள்,மனித உரிமை செயல்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த மக்களின் கோரிக்கையாக பள்ளகண்டல் அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான கொடியேற்றம் எதிர்வரும் 8 ஆம் திகதி இடம் பெற உள்ள நிலையில் முள்ளிக்குளம் கிராமத்தில் இருந்து மறிச்சிக்கட்டி பூக்குளம் ஊடாக பள்ளகண்டல் அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லும் பிரதான பாதையை திறந்து எதிர்வரும் 12ஆம் திகதி இடம் பெற உள்ள திருவிழா வரை தமக்கு குறித்த பாதையை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக உரிய திணைக்கள அதிகாரிகள் மற்றும் திணைக்கள தலைவர்கள் துரித நடவடிக்கை யை மேற்கொள்ள வேண்டும் என அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.










