மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் பிரதான பாலங்களில் ஒன்றான புதுப்பாலம் நேற்று மாலை உடைந்து வீழ்ந்துள்ளதனால் அப்பகுதியூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை எனும் காரணத்தினால் போக்குவரத்துகள் மிக குறைவாக இருந்தமையால் எந்த இழப்புகளும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான இப்பாலத்தின் வீதிகள் கடந்த ஆட்சிக்காலத்தில் புனரமைக்கப்பட்ட நிலையில் இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
பாடசாலை மாணவர்கள் அதிகளவில் பாவிக்கும் இந்த வீதியினை தினமும் பெருமளவான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர் காவுவண்டிகளும் இந்த வீதியினை கூடுதலாக பாவித்து வருகின்றது.
இந்த நிலையில் இந்த பாலம் இடிந்து வீழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேநேரம் குறித்த இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் மற்றும் மாநகரசபை ஆணையாளர் குறித்த பகுதியின் நிலைமைகளை பார்வையிட்டனர்.
மட்டக்களப்பு நகருக்குள் இரண்டு பிரதான பாலங்கள் ஊடாக நுழைய முடியும் இந்நிலையில் ஒரு பாலம் உடைந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக ஒரு பாலத்தினை பயன்படுத்த வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.











