ஹட்டன் கல்வி வலயத்தின் உதவிக் கல்விப்பணிப்பாளராக சேவையாற்றிய வணக்கத்திற்குரிய ஆசிர்வாதம் ஜோர்ஜ் வில்சன் அவர்கள் இன்றுடன் தனது 36 வருடகால கல்விப்பணியிலிந்து ஓய்வுபெறுகின்றார்.
ஆசிர்வாதம் ஜோர்ஜ் வில்சன் அவர்கள் ஆசிர்வாதம், மேரி ஆகியோரின் நான்காவது புதல்வராவர். இவர் தனது ஆரம்ப கல்வியை தரம் 1 முதல் 5 வரை கொத்மலை தேர்தல் தொகுதிக்குட்பட்ட ஹப்புகஜ்தலாவ, அல்கொல்ல தமிழ் வித்தியாலயத்திலும் அதன் பின் அல்மின் ஹாஜ் தேசிய கல்லூரியிலும் உயர் கல்வியை நாவலபிட்டி கதிரேசன் மத்திய கல்லூரிமற்றும் ஹைலன்ஸ் மத்திய கல்லூரியிலும் கற்றார்.
இவரின் முதல் நியமனமாக 1990.2.7 கணித பாட ஆசிரியராக வட்டவளை தமிழ் மகா வித்தியாலயத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். குறித்த பாடசாலையில் சேவையாற்றிய போது ஆசிரிய பற்றாக்குறை இருந்த போதும் அர்ப்பணிப்புடன் சேவையை வழங்கி இப்பகுதி மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினை பெற்றுக்கொள்ள காரணமாக இருந்தவர். அதுமட்டுமல்லாமல் இணைபாடவிதான செயற்பாடுகளில் புகழ்பெறுவதற்கும் காரணமாக இருந்தவர்.
தொடர்ந்து வட்டவளை மவுண்ஜீன் பாடசாலைக்கு அதிபராக 1995.3.8 நியமிக்கப்பட்டார். குறித்த பிரதேசத்தில் கல்வி ரீதியில் வளர்ச்சி பெறுவதற்கு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தார்.
குறித்த பாடசாலைக்கு இவரை நியமிக்கும் பொழுது ஒரு சிறிய தோட்ட உத்தியோகத்தரின் விடுதியில் இயங்கியது மட்டுமல்லாது அக்காலத்தில் 50 மாணவர்களை கொண்ட பாடசாலைகளை மூட அரசாங்கம் திட்டமிட்டிருந்த போதும் இவரின் இடைவிடாத முயற்சியினால் இப்பாடசாலை இன்று தரம் 11 வரை படிப்படியாக உயர்த்தப்பட்டு போதுமான கட்டிட வசதிகளையும், ஆசிரிய வளங்களையும் பெற்றுக்கொடுத்து இப்பிரதேச கல்வி வளர்ச்சிக்கு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவராவார்.
குறித்த பாடசாலை அமைந்த தோட்டம் பின்தங்கிய பிரதேசமாகவிருந்த போதும் இப்பகுதியில் 15 க்கும் அதிகமான ஆசிரியர்கள் உருவாகுவதற்கான அடிதளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து 1.1.2021 முதல் ஹட்டன் கல்வி வலயத்தில் உதவிக் கல்விப்பணிப்பாளராக இணைந்துகொண்டார். அங்கு ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பிரதேச மாணவர்களுடைய கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார்.
அவற்றில் பாடசாலை செல்லாத மாணவர்களுக்காக யுனிசேப் நிறுவனத்தின் நிதியிட்டலுடன் அம்மாணவர்களுக்கான 11 கற்றல் மையங்களை உருவாக்கி அவர்களை மீண்டும் பாடசாலைகளுக்கு அனுமதித்த பெருமை இவரையே சாரும்.
அதுமாத்திரமல்லாது வலய மட்டத்திலான கல்வி அபிவிருத்தி குழுவின் மூலமாக ஏற்படுத்தப்பட்ட எல்லா செயல்திட்டங்களிலும் அர்பணிப்புடன் சேவையாற்றியவர்.
தனது ஓய்வு காலம் வரை அதிபர் ஆசிரியர் மற்றும் பணிக்குழுவினர் ஆகியோரோடு மிக சிறப்பான வகையில் சேவையாற்றியதோடு கல்வி சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சேவையை சிக்கலின்றி முன்னெடுத்து செல்ல காரணமாகவும் செயற்பட்டவராவார்.
இதன் காரணமாக இவருடைய சேவை காலம் முடிவடையும் காலத்தில் இவரை அழைத்து அனேகமான பாடசாலைகள் சேவை நலன் பாரட்டு விழாக்களை நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இவருடைய ஒய்வு காலம் சிறப்பாக அமைய ஹட்டன் கல்வி வலய ஆசிரியர், அதிபர் மற்றும் பணிக்குழுவினர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர்.










