மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா ஜெசீதன், பிரதேச சபையின் வாகனத்தில் சாரத்தியம் பழகியதாக உறுப்பினர் அச்சுதபாயன் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
வார இறுதி விடுமுறை தினங்களில் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர், அவரது சாரதியுடன் பிரதேச சபையின் வாகனத்தை எடுத்துச் சென்று சாரத்தியம் பழகியுள்ளார். இது ஒரு ஊழல் செயற்பாடாகும்.
தவிசாளர் சாரத்தியம் பழக வேண்டும் என்றால் சாரதி பயிற்சி பாடசாலைகள் உள்ளன. அங்கு பயிற்சி பெறலாம். ஆனால் இவ்வாறு பிரதேச சபையின் வாகனத்தை விடுமுறை தினங்களில் பயன்படுத்தி ஊழல் புரிந்துள்ளார். இதன்போது மக்களது வரிப்பணம் வீண் விரயம் செய்யப்பட்டுள்ளது.
ஊழலை ஒழிப்பதாக வந்த தேசிய மக்கள் சக்தி அரசுக்கு இது ஒரு ஊழலாக தெரியவில்லையா? கடந்த காலங்களில் சனி, ஞாயிறு தினங்களில் வாகனம் பிரதேச சபையில் இருந்து எத்தனை மணிக்கு புறப்படுகிறது, எத்தனை மணிக்கு திரும்பி வருகிறது போன்ற சிசிடிவி காட்சிகளை விசாரணைக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். விரைவில் இந்த விசாரணைகள் இடம்பெற வேண்டும்.
இதேவேளை பிரதேச சபையின் காணிக்குள் இருந்து வாழைக்குலைகழையும் அவர் தனது வீட்டு தேவைக்கு எடுத்து சென்றதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதேபோல் பல ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுக்களை நான் சபையில் முன்வைத்தும் அவர் அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறான குற்றச்சாட்டுகள் தவிசாளர் மீது முன்வைக்கப்படும்போது தவிசாளர் அவற்றை திருத்திக் கொள்ளாமல் பழிவாங்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகிறார். ஆளுநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இது குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.









