“வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்த இடத்தைக் கண்டறிந்து துல்லியமான தகவல்களை வழங்கிய இராணுவ வீரரான சுரேஷ் சலேவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்புக்கும் தற்போதைய அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்” என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேகச் செயலாளர் சுகீஸ்வர பண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் தற்போதைய நிலைமை குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“சுரேஷ் சலே தனது உயிருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகவே சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். எந்தவொரு ஜனாதிபதி ஆணைக்குழுக்களிலாவது அல்லது சர்வதேச விசாரணைகளிலாவது சுரேஷ் சலேவின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை. அவ்வாறிருக்கையில், இந்த அரசு முற்றிலும் அரசியல் பழிவாங்கலை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அவரைத் திட்டமிட்டுத் தடுத்து வைத்துள்ளது.
தற்போது ஆட்சியில் உள்ள அரசிடம் மக்களுக்குச் சொல்வதற்கு எந்தப் பதிலும் இல்லை. பொருள்களின் விலைகள் குறைக்கப்படவில்லை, பணவீக்கம் நூற்றுக்கு 107 ஆக அதிகரித்துள்ளது, பொருளாதார வளர்ச்சி 10.3 ஆகக் குறைந்துள்ளது. இவ்வாறான தங்களின் தொடர் தோல்விகளை நாடாளுமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் மூடிமறைப்பதற்காகவே, சுரேஷ் சலேவின் உயிரைப் பலிகொடுக்க இந்த அரசு முயற்சிக்கின்றது.
இந்த நாட்டைப் பாதுகாத்த மாபெரும் இராணுவ வீரர் சுரேஷ் சலே ஆவார். பயங்கரவாதக் காலத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்த இடத்தைக் கண்டறிந்து சொன்னவர் அவர்தான். அதுமட்டுமன்றி, கே.பி. மற்றும் நெடுமாறன் ஆகியோரைப் பிடிப்பதற்கும் துல்லியமான உளவுத் தகவல்களை வழங்கியவர் அவரே.
கொவிட் பெருந்தொற்றுப் பரவலிலிருந்து இந்த நாட்டைப் பாதுகாப்பதிலும் முன்னின்று உழைத்த இராணுவ வீரர் அவர். இத்தகைய உன்னதமான ஒருவரின் உயிருடன் விளையாட வேண்டாம் என்று இந்த அரசிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ‘இராணுவ வீரர்’ என்று வாயாரச் சொல்வதற்குக் கூட நாவெழவில்லை. சுரேஷ் சலேவின் உயிர் தற்போது கடுமையான ஆபத்தில் உள்ளது. அவரது உயிருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், இந்நாட்டின் மீது அன்பு கொண்ட தேசப்பற்றுள்ள சக்திகள் நிச்சயமாக வீதிக்கு இறங்கிப் போராடுவார்கள். அவ்வாறு நடந்தால், தற்போதைய அரசுத் தலைவர்கள் ஒளிந்துகொள்ள இடமில்லாமல் போகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாட்டு மக்கள் உங்களுக்குத் தகுந்த பாடம் புகட்டத் தயாராக இருக்கிறார்கள் என்பதை ஜனாதிபதிக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம்” – என்றார்.










