கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு மூடப்பட்டுக் காணப்படுகின்ற முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு அருகிலுள்ள உப்புமால் வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்காக கையளிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு அருகில் இருந்த உப்புமால் வீதி தற்போது பயன்படுத்தப்படாது மூடப்பட்டுக் காணப்படுகின்றது.
கடற்கரைப் பகுதிகளில் இயற்கை அனர்த்தங்கள் ஏதேனும் ஏற்பட்டால், அந்தந்தப் பகுதிகளிலுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு தேவையான ஒரு வீதியாகவும் அந்த வீதி காணப்படுகின்றது.
எனவே மூடப்பட்டுள்ள அவ்வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்காக விடுமாறு இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் வலியுறுத்தப்பட்டது.
இதன்போது முல்லைத்தீவுமாவட்ட செயலாளர் அ. உமாமகேஸ்வரன் பதிலளிக்கையில்,
அந்தப்பகுதியில் 591ஆவது படைப்பிரிவுத் தளபதியின் வதிவிடம் இருப்பதால், அந்த வீதி தடைசெய்யப்பட்டிருக்கின்றதென நினைக்கின்றேன்.
தற்போது அவ்வீதியைச் சீரமைக்க இருப்பதால் அந்த வீதியை விடுவிப்பதற்கான கோரிக்கையினை அவர்களிடம் முன்வைப்போம் – என்றார்.










