உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமையானது, தற்போதைய அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“தற்போதைய அரசு ட்ரில்லியன் கணக்கில் வெளிநாட்டுக் கடன்களைப் பெற்ற போதிலும், நாட்டில் எவ்வித அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுக்கவில்லை.
அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வு மற்றும் எரிபொருள் விலை ஏற்றம் காரணமாக ஒட்டுமொத்த மக்களும் கடுமையான பொருளாதாரச் சுமையை எதிர்கொண்டுள்ளனர்.
அரசின் மீதான இந்த மக்கள் அதிருப்தியை மறைக்கவும், தங்களின் நிர்வாகத் தோல்விகளைத் திசைதிருப்பவுமே கோட்டாபய ராஜபக்ஷவை இலக்கு வைத்து அரசு இவ்வாறான கீழ்த்தரமான நாடகங்களை அரங்கேற்றி வருகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல விசாரணை ஆணைக்குழுக்கள் மற்றும் பாராளுமன்றத் தெரிவுக்குழுக்கள் அமைக்கப்பட்டன.
அத்துடன் அமெரிக்காவின் எப்.பி.ஐ., இன்டர்போல், ஆஸ்திரேலிய மற்றும் ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸார் என பல சர்வதேச புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்த எந்தவொரு விசாரணையிலும் கோட்டாபய ராஜபக்ஷ அல்லது சுரேஷ் சலே ஆகியோரின் பெயர்கள் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
இந்தத் தாக்குதலானது நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் மசூதி தாக்குதலுக்குப் பழிவாங்கும் வகையில், சஹ்ரான் தலைமையிலான ஐ.எஸ்.ஐ.எஸ். கொள்கையுடைய தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது என்பது சர்வதேச ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எப்.பி.ஐ. விசாரணைப் பிரிவின் பிரதானி ராஜ் படேலும் இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
இவ்வாறிருக்கையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளர் நாயகம் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சு, தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்காமல் தனிநபர்களை வேட்டையாடுவதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.
சுரேஷ் சலே போன்ற ஒரு உயர் அதிகாரியை 180 நாள்கள் தடுத்து வைத்து சித்திரவதை செய்வது அநீதியானது.
அதேபோல், அசாத் மௌலானா என்பவர் வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோருவதற்காக ‘சனல் 4’ ஊடகத்துக்கு வழங்கிய ஆதாரமற்ற பொய்களை அடிப்படையாகக் கொண்டு, சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப் பீரிஸ் செயற்படுவது முழு திணைக்களத்துக்கும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.
ஆனால், இந்தத் தேர்தலின் ஊடாக வடக்கு மாகாணத்துக்குக் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க முற்பட்டால் அதுவே நாட்டின் பெரும் பிரச்சினையாக உருவெடுக்கும்.
அவ்வாறு செய்வது, பல தசாப்தங்களாக நாம் பாதுகாத்து வந்த நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையை இல்லாது செய்து, நாட்டை ஒரு கூட்டாட்சி நாடாக மாற்றிவிடும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
கடந்த கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், கொவிட் – 19 பெருந்தொற்றுப் பேரழிவுக்கு மத்தியிலும் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகள் தடையின்றி உறுதிப்படுத்தப்பட்டன.
ஆனால், தற்போதைய அரசு தேசிய பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கியுள்ளது.
இத்தகைய அரசியல் சதி முயற்சிகள் நிறுத்தப்படும் வரை, நாட்டுப்பற்றுள்ள மக்களுடன் இணைந்து நாம் இதனை உன்னிப்பாகக் கண்காணிப்போம்.” – என்றார்.










