முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ சமர்ப்பித்த சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ‘சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டை’ முன்னோக்கி கொண்டு செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி, அவர் சீராய்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதன்படி, குறித்த மனுவை உத்தியோகபூர்வ விசாரணைக்காக எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் திகதி நீதிமன்றில் அழைப்பதற்கும் நீதியரசர்கள் ஆயத்தினால் திகதி குறிக்கப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று இந்த மனு நீண்ட நேரம் பரிசீலிக்கப்பட்டதன் பின்னரே, நீதியரசர்கள் குழுவினால் இந்த விசேட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக நிலுவையிலுள்ள சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கை, தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என கொழும்பு மேல் நீதிமன்றம் முன்னர் தீர்ப்பளித்திருந்தது.
மேல் நீதிமன்றம் வழங்கிய அந்த உத்தரவானது சட்டத்துக்குப் புறம்பானது என்பதால், அதனை முழுமையாகச் செல்லுபடியற்றதாக்குமாறு கோரியே யோஷித ராஜபக்ஷ தனது சீராய்வு மனுவின் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசேட பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரரான யோஷித ராஜபக்ஷ தனிப்பட்ட முறையில் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.










