மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனைப் பகுதியில் மரத்திலிருந்து கீழே விழுந்து 34 வயதுடைய பூநொச்சிமுனை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை பாலமுனைப் பகுதியில் காணி ஒன்றினுள் மரத்தின் மேல் ஏறி மரம் வெட்டிக் கொண்டிருந்தபோது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மரத்தில் இருந்து விழுந்து பலத்த காயங்களுக்குள்ளான அவரை, அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
எனினும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
இவ் விபத்து மற்றும் மரணம் குறித்து காத்தான்குடி பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, காத்தான்குடி பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
உயிரிழந்த நபர் தனது வாழ்வாதாரத் தேவைக்காக மரம் ஒன்றில் ஏறியிருந்த போதே, எதிர்பாராதவிதமாக கால் வழுக்கி நிலைதடுமாறி மரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.
சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பாலமுனை மற்றும் ஆரையம்பதி பிரதேச மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.










