பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியின் புனானி பகுதியில் நேற்று திங்கட்கிழமை (01) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, எதிர்த்திசையில் வந்த டிப்பர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி, அதன் பின் இருக்கையில் பயணித்த ஒரு பெண் மற்றும் இருவர் உட்பட நான்கு பேர் பலத்த காயங்களுக்குள்ளாகினர். அவர்கள் உடனடியாக வெலிக்கந்த மற்றும் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், வெலிக்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 20 வயதுடைய இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, விபத்தினால் வீதியை விட்டு விலகி கவிழ்ந்த டிப்பர் வாகனத்தின் சாரதியும் காயமடைந்த நிலையில், வெலிக்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் வாழைச்சேனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.











