மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி, நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி வேறு தேவைகளுக்காக மறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து நாடாளுமன்ற அரச நிதி பற்றிய குழு அவசர விசாரணை நடத்த வேண்டும் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, நாடாளுமன்ற அரச நிதி பற்றிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவுக்கு நேற்று திங்கட்கிழமை திகதியிட்டு மனோ கணேசன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது:-
“மாகாண சபைத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, அரசால் அனர்த்த மறுசீரமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா கருத்துத் தெரிவித்திருந்தார்.
எனக்குத் தெரிந்த வரை, இத்தகையதொரு தேர்தல் நிதியை வேறு செலவினத் தலைப்புகளுக்கு மாற்றுவதற்கோ அல்லது மறு ஒதுக்கீடு செய்வதற்கோ நாடாளுமன்றம் எந்தவொரு அனுமதியையும் வழங்கவில்லை. ரில்வின் சில்வாவினால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை துல்லியமானது எனின், அது நாடாளுமன்ற அனுமதியின்றி பொது நிதியை அங்கீகரிக்கப்படாத வழிகளில் பயன்படுத்திய பாரதூரமான செயலையே குறிக்கின்றது.
பொது நிதி மீதான முழு அதிகாரமும் நாடாளுமன்றத்துக்கே காணப்படுகின்றது. எனவே, தேர்தல் நிதியை மாற்றுவது, மறு ஒதுக்கீடு செய்வது அல்லது செலவிடுவது போன்ற நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் மற்றும் நிதி விதிமுறைகளை மீறி நடந்துள்ளதா என்பதை அரச நிதி பற்றிய குழு உடனடியாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். அத்துடன் இந்தக் குழு, தனது அதிகார வரம்புக்குள் இதற்குரிய தகுந்த சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” – என்று மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.










