அரசை அசைக்க முடியுமா, முடியாதா என்பதை அறிய வேண்டுமாயின் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசை அசைத்துக் காட்டுவோம் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குச் சவால் விடுத்துள்ளார்.
அரசின் பலவீனமான நிர்வாகத்தின் சுமை ஒட்டுமொத்த மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தற்போது ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டு வருகின்றது. கடந்த அரசின் காலத்தில் எரிபொருள் இறக்குமதியின்போது, அதன் வரி வலுசக்தி அமைச்சருக்குச் செல்வதாக மக்கள் விடுதலை முன்னணியினர் குற்றஞ்சாட்டியிருந்தனர். அத்துடன், தாம் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வரியை இரத்துச் செய்து, அதன் பயனை எரிபொருள் விலை குறைப்பு ஊடாக மக்களுக்கு வழங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால், தற்போதைய தரமற்ற நிலக்கரி கொள்வனவினால் ஏற்பட்டுள்ள நிதி இழப்பை முகாமைத்துவம் செய்வதற்காகவே, ஒவ்வொரு மாதமும் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படுகின்றது. தரமற்ற நிலக்கரி கொள்வனவினால் இழக்கப்பட்ட பல பில்லியன் ரூபாய் நிதியை மீள அறவிடுவதற்கு அரசு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இந்த எரிபொருள் விலையேற்றத்தால் ஒட்டுமொத்த மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி குறிப்பிடும் நிவாரணங்கள் வெறும் பேச்சளவில் மாத்திரமே வரையறுக்கப்பட்டுள்ளன. செயலில் ஏதுமில்லை.
அரசை அசைக்க முடியுமா, முடியாதா என்பதை அறிய வேண்டுமாயின் தேர்தலை நடத்த வேண்டும். தைரியமிருந்தால் தேர்தலை நடத்துங்கள், இந்த அரசை நாம் அசைத்துக் காட்டுகின்றோம் என ஜனாதிபதிக்குச் சவால் விடுக்கின்றேன். இனிவரும் காலங்களில் எந்தவொரு அரசியல் கட்சியும் ஆட்சிக்கு வர இடமளிக்கக் கூடாது என்ற குறுகிய மனநிலையில் இருந்துகொண்டே தற்போதைய அரசு செயற்பட்டு வருகின்றது. கடந்த கால அரசுகள் அவ்வாறு செயற்பட்டிருந்தால், மக்கள் விடுதலை முன்னணி ஒருபோதும் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது.
எனவே, மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்துகின்றோம். தோல்வியடைந்து விடுவோம் என்பதற்காகத் தேர்தலை நடத்தாமல் இருக்கக் கூடாது. கடந்த நல்லாட்சி அரசு 2017ஆம் ஆண்டு தோல்வியை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாமல், மாகாண சபைத் தேர்தல் முறைமையை நெருக்கடிக்குள்ளாக்கியது. அதன் தாக்கமே இன்றுவரை தொடர்கின்றது.” – என்றார்.










