திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 96ஆம் கட்டை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (29) முச்சக்கரவண்டி ஒன்று வயலுக்குள் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில், 99ஆம் கட்டையைச் சேர்ந்த 67 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
ஆரம்பகட்ட தகவல்களின் படி, உயிரிழந்த பெண் உட்பட இரு சிறுவர்கள் 99ஆம் கட்டையிலிருந்து 10ஆம் கொலனியில் உள்ள உறவினர் வீட்டிற்கு முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்ததாக 96ஆம் கட்டை பகுதியை அண்மித்தபோது முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் குடைசாய்ந்துள்ளது.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உட்பட மேலும் இருவர் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.












