மட்டக்களப்பு நகரில் உள்ள இலங்கை விமானப்படை முகாமுக்கு அருகில் செல்லும் வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விமான நிலையத்திற்கு அருகினால் திருப்பெருந்துறைக்கு செல்லும் வீதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் கடமையாற்றும் இளைஞன் கடமை முடிந்து குறித்த வீதியின் ஊடாக வேகமாக சென்றுகொண்டிருந்தபோது வேகக் கட்டுப்பாட்டையிழந்து கல்லில் மோதி ஆற்றிக்குள் இளைஞன் தூக்கிவீசப்பட்டுள்ளார்.
இதனை அவதானித்த விமானப்படை வீரர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இளைஞன் உடனடியாக மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதிலும் அங்கு சிக்கிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் மட்டக்களப்பு திருப்பெருந்துறை, 04வது குறுக்கு வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய பரமநாதன் கதிர்செல்வன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில்நீதிபதி வினோபா இந்திரனின் பணிப்புரைக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி த.தவக்குமார் இது தொடர்பான மரண விசாரணையினை முன்னெடுத்தார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.












