இருவேறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடை குற்றச்சாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் ஜூன் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை மதுகம வெலிகந்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பின்னர் லிந்துலை பத்தனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கொழும்பு – ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய மகேஷ் அசலங்க டி சொய்சா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தலவாக்கலை கிரேட் வெஸ்டன் மலை உச்சியில் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 ஆம் திகதி பெண்ணொருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் தலங்கம பொலிஸ் பிரிவில் 57 வயதுடைய பெண்ணொருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆகிய இரு வழக்குகளுடனும், இவர் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மத்திய மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், சந்தேகநபரின் தொலைபேசி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில் இவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து தடுப்புக்காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று (26) நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, சந்தேகநபரை எதிர்வரும் ஜூன் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரட்டை கொலைச் சம்பவங்கள் தொடர்பிலும் லிந்துலை மற்றும் தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.










