ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன் அவர்களை பொலிஸார் விசாரணைக்காக அழைத்துள்ளமையானது ஜனநாயகத்திற்கும் ஊடக சுதந்திரத்திற்கும் எதிரான அச்சுறுத்தலாகும் என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது
வவுனியா மாநகரசபையின் முன்னாள் துணை முதல்வரும் ஜனநாயக தேசிய கூட்டணி கட்சியின் பிரதி தலைவருமான பரமேஸ்வரன் கார்த்தீபன் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது
ஒரு ஊடகவியலாளரின் கடமை உண்மைகளை வெளிக்கொணர்வதும், மக்களின் குரலை பதிவு செய்வதும் ஆகும்.
இவ்வாறான நிலையில் செய்தி சேகரிப்பு மற்றும் வெளியீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவரை அழுத்தம் கொடுக்கும் வகையில் விசாரணைக்கு உட்படுத்துவது ஊடகத் துறையில் அச்சமான சூழலை உருவாக்கும்.
சட்டம் மற்றும் ஒழுங்கு பேணப்பட வேண்டியது அவசியமானதாயினும், அதனை காரணமாகக் கொண்டு ஊடகச் செயற்பாட்டாளர்களை மிரட்டும் அல்லது கட்டுப்படுத்தும் முயற்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
ஜனநாயக சமூகத்தில் கருத்துச் சுதந்திரமும் ஊடக சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகளாகும்.
ஊடக சுதந்திரத்தை மதிக்கும் அனைத்து ஜனநாயக சக்திகளும் இந்த சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.










