மட்டக்களப்பில் உள்ள பிரபல விடுதி ஒன்றின் மேல் மாடியில் தங்கியிருந்த இரண்டு குழந்தைகள் தீ விபத்தில் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று வயது நிரம்பிய ஆண் குழந்தையும், ஐந்து வயது நிரம்பிய பெண் குழந்தையுமே இவ்வாறு உயிரிழந்திருக்கின்றார்கள்.
மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் உள்ள பிரபல விடுதியில் தங்கியிருந்த, பசறையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் இரண்டு பிள்ளைகளே இவ்வாறு உயிரிழந்தனர்.
குறித்த குழந்தைகளின் தாயார் புற்றுநோய்க்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், அவர்கள் பசறையிலிருந்து மட்டக்களப்பிற்கு வருகை தந்து, தந்தையுடன் குறித்த விடுதியில் தங்கியிருந்தனர்.
இன்று மாலை அவர்களின் தந்தை குறித்த குழந்தைகளை அறையில் வைத்து மூடிவிட்டு, விடுதியின் கீழ்ப் பகுதியில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், குறித்த அறையிலிருந்து புகை வெளிவருவதாக, தந்தைக்கு தெரியப்படுத்தியதை அடுத்து அங்கு சென்ற அவர் மூச்சற்ற நிலையயில் காணப்பட்ட குழந்தைகளை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தார்.
எனினும் குழந்தைகள் இறந்திருப்பதாக வைத்தியசாலையினால் உறுதிப்படுத்தப்பட்டது.
இதேபோன்று நேற்று காத்தான்குடி பகுதியில் நேற்று மாலை தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்ற அதே நேரம், இன்று காத்தான்குடி வைத்தியசாலையிலும் ஒரு தீ விபத்துச் சம்பவம் பதிவாகி இருக்கின்றமை குறிப்பிடத் தக்கது










