போக்குவரத்து சட்ட ஒழுங்கை நடைமுறைப்படுத்தவும் விபத்துக்களை கட்டுப்படுத்துவதை நோக்காகவும் கொண்டு வங்களாவடி நகர்ப் பகுதியில் சுற்றுவட்டம் ஒன்றை அமைப்பது அவசியம் என சபையின் வேலணைப் பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (20) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது சுற்றுவட்டத்தின் அவசியதேவை கருதி முன்மொழிவொன்றை சமர்ப்பித்து உரையாற்றிய அனுசியா ஜெயகாந்த் மேலும் கூறுகையில்,
வங்களாவடி நகரின் மையத்தில் சுற்றுவட்டம் ஒன்றை அமைப்பதை சிலர் விரும்பாதிருக்கலாம். அதற்காக கனரக வாகனங்களை கொண்டு செல்வது கடினம் என்றும் இட அமைவு போதாதென்றும் சாட்டுப் போக்கை கூறி சுற்றுவட்டம் அமைக்கப்படுவதை தடுக்கவும் முற்படலாம்.
ஆனால் இதில் அரசியலையோ தனிநபர் விருப்பு வெறுப்பையோ கொண்டுவருவது அவசியமற்றது.
இதேநேரம் இந்த சுற்றுவட்டம் என்பது பிரதேசத்தின் அழகையும் அடையாளத்தையும் உறுதி செய்வதுடன் வீதிச் சட்ட ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்வதுடன் விபத்துக்கள் ஏற்படுவதையும் தடுக்கும் ஒரு செயற்பாடாகவும் இருக்கும்.
இதேவேளை இந்த வீதியின் மையத்தில் ஏற்கனவே ஒரு சுற்றுவட்டம் இருந்தது.
ஆனால் இன்று வீதி அகலிக்கப்பட்டுள்ளது, கடைத் தொகுதிகளும் பெரியளவில் கட்டப்பட்டு செயற்படுகின்றன.
அதேபோன்று இருக்கின்ற இட அமைவுக்கேற்ப வீதியின் நடுவே ஒரு குறியீட்டு ரீதியிலான சுற்றுவட்டத்தை நவீன தொழில்நுட்ப ரீதியான பொறிமுறையை வகுத்து இந்த சுற்றுவட்டத்தை அமைப்பது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
குறித்த முன்மொழிவை வரவேற்ற சபையின் உறுப்பினர்கள், இச்சுற்றுவட்டத்தின் அவசியம் கருதி துறைசார் தரப்பினரின் ஆலோசனையை பெற்று நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் என தவிசாளர் சி.சோக்குமார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










