தற்போதைய அரசின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாடற்ற ரூபாய் வீழ்ச்சி காரணமாக, ஒட்டுமொத்த பொதுமக்களும் மிகக் கடுமையான வாழ்க்கைச் செலவு மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசைக் கையளிக்கும் போது அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு சுமார் 292 ரூபாவாகக் காணப்பட்டது. ஆனால், தற்போதைய நிர்வாகம் பொறுப்பேற்று 20 மாதங்கள் கடந்துள்ள நிலையில், டொலரின் விலை 354 ரூபா வரை அதிகரித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடற்ற ரூபா வீழ்ச்சியானது நாடு தற்போது எதிர்கொண்டுள்ள ‘மிகவும் பாரதூரமான’ பிரச்சினையாகும்.
கடந்த அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையான பொருளாதாரக் கொள்கைகளைத் தற்போதைய அரசு தொடரத் தவறியமையே இந்நிலைக்குக் காரணமாகும். முறையான பொருளாதாரத் திட்டமின்மை மற்றும் வெளிநாட்டு கையிருப்புகளை வலுப்படுத்தத் தவறியமை போன்ற காரணிகளே அமெரிக்க டொலரின் மதிப்பு இந்த அளவுக்கு உயர்வதற்குக் வழிவகுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் உலகளாவிய அழுத்தங்களுக்கு மத்தியில் ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையக்கூடும் எனத் தனியார் துறையின் பல பிரிவினர் ஏற்கனவே கவலை வெளியிட்டுள்ளனர். ரூபாய் பலவீனமடைவதால் சில ஏற்றுமதித் துறைகள் தற்காலிகமாக அதிக வருமானத்தைப் பெற்றுப் பயனடைந்தாலும், சாதாரண உழைக்கும் மக்களும் பொதுமக்களும் இதனால் ஏற்படும் கடுமையான வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் மிக மோசமாகப் பாதிக்கப்படுவர்.
குறிப்பாக ஆடைத் தொழிற்றுறை போன்ற முக்கிய ஏற்றுமதித் துறைகளில் எதிர்பார்த்த வளர்ச்சியைப் பெறுவதும் தற்போதைய உலகச் சூழலில் சாத்தியமற்றதாகும். ஐரோப்பிய சந்தைகளில் நிலவும் மந்தநிலை, சர்வதேச ஸ்திரமற்றதன்மை மற்றும் செங்கடல் தாக்குதல்கள், ஹார்முஸ் நீரிணை விவகாரங்கள் காரணமாக உலகளாவிய கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஏற்பட்டுள்ள தடைகள் என்பன கப்பல் கட்டணங்களை அதிகரித்துள்ளன. இது இலங்கையின் ஏற்றுமதித் துறையைப் பாரதூரமாகப் பாதிக்கும்.
ரூபாய் வீழ்ச்சியை நேர்மறையான ஒன்றாகக் காட்டுமாறு அண்மையில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ குறிப்பிட்டிருந்த கருத்துக்களையும், அதற்கு கூட்டு ஆடை சங்கங்களின் ஒன்றியம் வழங்கிய பதில்களையும் ஐக்கிய தேசியக் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
நாட்டின் ஆடைத் துறையினர் தங்களின் தற்காலிக இலாபங்களை மட்டுமே நோக்காகக் கொண்டு, பொதுமக்கள் எதிர்கொள்ளும் துயரங்களை மறைக்க முயல்வது ஏமாற்றமளிக்கின்றது.
இலங்கையில் ஆடைத் தொழிற்றுறையை உருவாக்குவதிலும் மேம்படுத்துவதிலும் கடந்த கால ஐக்கிய தேசியக் கட்சி அரசுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பைச் செய்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் திறந்த பொருளாதாரக் கொள்கையும், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 200 ஆடைத் தொழிற்சாலைகள் திட்டமுமே இந்தத் துறையின் அடித்தளமாகும். எனவே, தற்போதைய பொருளாதார நெருக்கடிகளின் சுமையைத் தொழிலாளர்கள் மீது சுமத்த வேண்டாம் என ஏற்றுமதியாளர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
அரசு உடனடியாக இந்தத் தற்காலிகக் கற்பனைக் கதைகளை நிறுத்திவிட்டு, நாட்டைப் பொருளாதார ரீதியாகப் பாதுகாப்பதற்கான உண்மையான மற்றும் நிலையான திட்டங்களை முன்வைக்க வேண்டும்.” – என்றுள்ளது.










