ஏனைய நாடுகளிலே இன்று எரிபொருளுக்கான பாரியளவிலான விலை அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது, வரிசை யுகம் ஏற்பட்டது. ஆனால் இலங்கையிலே அப்படி ஒரு நிலைமை இல்லாத வகையிலே நாங்கள் இந்த நாட்டைச் சரியான முறையில் கொண்டுசெல்கின்றோம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
சொந்தமாக இருக்க ஒரு இடம் ஒரு அழகான வாழ்க்கை எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வீடுகளை அமைப்பதற்கான நிதிகள் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.
இதன் கீழ் தேசிய வீட்டு வசதி வேலைத்திட்டத்திற்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் இ.ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் தங்கத்துரை சுபாஸ்கரன், திணைக்கள அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரஜாசக்தி தலைவர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தெரிவு செய்யப்பட்ட 38 பயனாளிகளுக்கு தலா 150,000 ரூபா வீதம் காசோலைகள் வழங்கப்பட்டது. இதற்காக 5.7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,
தேசிய வீடமைப்பு அதிகார சபையினூடாக வழங்கப்படுகின்ற இந்த வேலைத்திட்டத்தில் 2026-ஆம் ஆண்டுக்கான இந்தப் பிரதேச செயலகத்திற்கு ஒட்டுமொத்தமாக இரண்டு திட்டங்களையும் புதிய வீடமைப்புத் திட்டங்களையும், அதே நேரம் ‘கிராமத்திற்கு ஒரு வீடு’ என்ற அடிப்படையில் வழங்குகின்ற வீட்டுத்திட்டத்தையும் அதற்கான காசோலை வழங்குவதற்காக நாங்கள் ஒன்று கூடியிருக்கின்றோம்.
ஒட்டுமொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 343 வீடுகளுக்கு ‘கிராமத்திற்கு ஒரு வீடு’ என்ற அடிப்படையில் 129 மில்லியன் ரூபாயும், வீடமைப்பில் ‘மாதிரி கிராமம்’ என்று சொல்லக்கூடிய மாதிரி வீட்டுத்திட்டத்தினூடாக 136 வீடுகளுக்காக 115 மில்லியன் ரூபாயையும், ஒட்டுமொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையினூடாக 200 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடுகளுக்கான காசோலைகளை நாங்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.
ஆகவே, எங்களது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த நாட்டை நாங்கள் பொறுப்பேற்றதன் பின்னர், கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமாக கடந்த காலங்களில் 10 வருடத்திற்கு மேற்பட்ட காலப்பகுதியில் கைவிடப்பட்ட பல மாதிரி வீட்டுத்திட்டங்களை, அதற்கான நிதிகளை வழங்குவதற்காக நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தோம். கௌரவ ஜனாதிபதி அவர்களின் ஆலோசனைக்கு அமைய, வீடற்றவர்களுக்கு வீடுகளை வழங்கும் அந்த வேலைத்திட்டத்தினூடாக நாங்கள் தொடர்ச்சியாக வீடமைப்பிற்கான நிதிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.
ஒட்டுமொத்தமாக கடந்த காலங்களிலே இந்த நாட்டை நிர்வாகித்தவர்கள், இந்த நாட்டை அரசமைத்தவர்கள் அழித்திருந்தார்கள். அதிலே கடந்த கால ஆட்சியாளர்கள் இந்த நாட்டை ஒரு வங்குரோத்து நிலைமைக்குக் கொண்டு வந்து, நாட்டை நிர்வகிக்க முடியாத ஒரு நிலைமையில் நிதி ரீதியாக விட்டுச் சென்றிருந்தார்கள்.
ஆனால் இந்த நாட்டை தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகிய நாங்கள் பொறுப்பேற்றதன் பின்னர், கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களின் ஆலோசனைக்கு அமைய, தொடர்ச்சியாக எங்களது முன்னெடுப்புகளை மக்கள் சார்ந்த நலன்களிலே கூடுதலான நிதிப் பங்களிப்புகளை வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.
உங்களுக்குத் தெரியும் கடந்த காலங்களில் பல நிதிகள், திறைசேரி நிதிகளை வீணடித்து, ஒட்டுமொத்தமாக அவர்கள் தங்களது சுயநலத்துக்காகவும், தங்களது சுகபோகத்துக்காகவும் அந்த நிதிகளைப் பயன்படுத்தி இருந்தார்கள். ஆனால் இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒட்டுமொத்த இந்த அரசியல் கலாச்சாரத்தையே மாற்றியமைத்திருக்கின்றோம்.
நிதிகளைச் சேமிக்கின்ற, நிதிகளை வீணடிக்காது ஊழல் செய்யாத ஒரு அரச கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியிருந்தோம். அதனூடாக இந்தத் திறைசேரியில் இருக்கின்ற நிதிகளைப் பயன்படுத்தி மீண்டும் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தும் விதமாக, அந்த நலன்களுக்கு ஏற்ற விதமாக நாங்கள் நிதிகளைக் கையாண்டிருந்தோம்.
அண்மைக்காலத்தில் பேசுகின்ற ஒரு விடயமாக இருந்தது, உலகப் போர் நிலைமையின் போது கூட எரிபொருள் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, சரியான முறையில் எரிபொருட்களை நாங்கள் நிர்ணயித்து, புதிய முறைமைகளைக் கொண்டு வந்து, இந்த நாட்டிலே கட்டுப்பாடான ஒரு எரிபொருள் தட்டுப்பாடு இல்லாத ஒரு நிலைமையிலே கொண்டு நடத்தியிருந்ததை அவதானித்திருப்பீர்கள்.
ஏனைய நாடுகளிலே இன்று எரிபொருளுக்கான பாரியளவிலான விலை அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது, வரிசை யுகம் உருவாக்கப்பட்டது. ஆனால் இலங்கையிலே அப்படி ஒரு நிலைமை இல்லாத வகையிலே நாங்கள் இந்த நாட்டைச் சரியான முறையில் நிர்ணயித்திருக்கின்றோம்.
ஆகவே, அதனைப் போன்று இப்போது ஊழல் தொடர்பான பேசுபொருளாக நிலக்கரி தொடர்பான விடயங்கள் பேசப்பட்டு கொண்டிருந்தது. நிலக்கரியிலே அமைச்சர் அவர்கள் தொடர்புபட்டிருப்பதாக அவரைக் குற்றம் சாட்டியிருந்தார்கள். நம்பிக்கையில்லாப் பிரேரணையும் நாடாளுமன்றத்திலே கொண்டு வரப்பட்டிருந்தது. அதனை நாடாளுமன்றத்தில் நாங்கள் தோற்கடித்திருந்தோம்.
ஆகவே உண்மையிலே பிழையான ஒரு விடயத்தை முன்னெடுத்திருந்தார்கள். ஜனாதிபதி அவர்கள் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில், இதற்கு முன்னர் வழங்கப்பட்டிருந்த நிலக்கரி தொடர்பான விடயங்களில் இருந்து ஜனாதிபதி ஆணைக்குழுவை நிர்ணயித்திருக்கின்றோம். அதனூடாக உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கான விடயங்களைச் செயற்படுத்தியிருந்தோம்.
அதனைப் போன்று அதோடு தொடர்புபட்டதாகக் கூறப்படுகின்ற அமைச்சர் தானே முன்வந்து, அந்த ஆணைக்குழுவின் விசாரணை சுயாதீனமாக அமையப் பெற வேண்டும் என்பதற்காக இராஜினாமா செய்திருந்தார்.
ஆகவே இப்படிப் பல விடயங்கள் கடந்த காலங்களில் எப்போதுமே இடம்பெற்றிருப்பதில்லை.
இந்த மக்களின் அபிலாஷைகளை, அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஒரு அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இருப்பதால்தான் அந்த விடயங்களிலே எங்களது சுயாதீனத்தன்மையை நாங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றோம். நீதி விசாரணைகள் சரியான முறையில் இடம்பெற வேண்டும் என்பதிலே நாங்கள் குறியாக இருக்கின்றோம்.
எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம், இந்தத் திறைசேரியிலே நிதி மோசடி இடம்பெற்ற விடயம், அதாவது ஹேக் செய்யப்பட்டதாக, அதிலே பணம் சூறையாடப்பட்டிருந்ததாகப் பல விடயங்களை பேசிக் கொண்டிருக்கின்றார்கள். எதிர்க்கட்சித் தலைவர் போன்று இன்னும் அனைத்து எதிர்க்கட்சியினைச் சார்ந்தவர்களும் இந்த விடயத்தைப் பேசுகின்றார்கள். ஆனால் ஹேக் செய்யப்படுகின்ற விடயம் அல்லது இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுவது என்பது சாதாரணமாக அனைத்து நாடுகளிலும் இடம்பெறுகின்ற ஒரு விடயம். இதிலே சரியான ஒரு முறைமை அங்கே இருக்கவில்லை.
கடந்த காலங்களில் இருந்து அவர்கள் பயன்படுத்திக் கொண்டு வந்த அந்தத் தொழில்நுட்பத்தினூடாகத்தான் அந்தத் தவறுகள் இடம்பெற்றிருக்கின்றது. ஆகவே இதையும் விசாரிப்பதற்கு நிதி அமைச்சிலே அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஆகவே இந்த விடயங்களும் கூட ஹேக் செய்யப்பட்ட அல்லது பரிமாற்றப்பட்ட அந்த மில்லியன் ரூபாய் பெறுமதியான பணம் மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்ற விடயத்தை நான் இந்த நேரத்தில் குறிப்பிட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.
















