மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறைப் பகுதியில், உடலில் காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
உன்னிச்சை, நெடியமடுப் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய கணபதிப்பிள்ளை யோகராசா என்ற முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இன்று காலை 8 மணியளவில் பாவக்கொடிச்சேனை சிவன் கோவில் பாறைப் பகுதியில், காயங்களுடன் நபர் ஒருவர் சடலமாகத் தரையில் கிடப்பதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள், அது குறித்து உடனடியாக வவுணதீவு போலீஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுணதீவு போலீஸார், மட்டக்களப்பு தடயவியல் பிரிவு அதிகாரிகளை வரவழைத்து முதற்கட்டப் புலனாய்வு விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சடலத்தைப் பார்வையிட்டதுடன், மரணத்துக்கான காரணத்தைக் கண்டறியச் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.
நீதவானின் உத்தரவுக்கமைய, சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவரைக் கொ*லை செய்துவிட்டு சடலத்தை இங்கு வீசிச் சென்றார்களா அல்லது பாறையிலிருந்து தவறி விழுந்ததால் காயங்கள் ஏற்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் வவுணதீவு போலீஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










