மட்டக்களப்பு நகருக்குள் இன்று அதிகாலை பாரவூர்தி ஒன்று கடைகளை உடைத்து பாரிய விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி மற்றும் நடத்துனர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.
கொழும்பிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டுவந்த பாரவூர்தி மட்டக்களப்பு திருமலை வீதியில் மட்டக்களப்பு நருக்குள் விபத்துக்குள்ளானது.
நித்திரை கலக்கம் காரணமாக குறித்த பாரவூர்தி விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
இதன்போது கடைகளை உடைத்து குறித்த பாரவூர்தி விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் இந்த விபத்து காரணமாக குறித்த பகுதிக்கான தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்தின்போது சாரதி சிறிய காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வேறு எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இது தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் தொலைத்தொடர்பு சேவையினை மீள செயற்படுத்துவதற்கான நடவடிக்கைளை தொலைத்தொடர்பு நிறுவனம் முன்னெடுத்துள்ளது.













