பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்குச் சொந்தமானது என நம்பப்படும் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கையிருப்புடன் கணேமுல்ல பகுதியில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் கணேமுல்ல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 9 கிலோகிராம் 946 கிராம் ஹெரோயின் மற்றும் 12 கிலோகிராம் 300 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் ஒரு உந்துருளி, தராசு மற்றும் பணத்தை எண்ணும் இயந்திரம் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேல் மாகாண வடக்கிற்குப் பொறுப்பான குற்றப்புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது வெளிநாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிக்கே இந்த போதைப்பொருள் சொந்தமானது என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து மேல் மாகாண வடக்கிற்குப் பொறுப்பான குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.










