துப்பாக்கிச் சூடு நடத்தி நபர் ஒருவரைக் கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசைகளை வழங்கிய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களை வலான ஊழல் ஒழிப்பு பிரிவினர் நேற்று (23) கைது செய்துள்ளனர்.
கடந்த 12ஆம் திகதி காலி – தங்கேதர பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பிலேயே இந்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
வலான ஊழல் ஒழிப்பு அதிரடிப்படை அதிகாரிகள் குழுவினால், இக்குற்றத்திற்குத் துணையாக இருந்த இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது, ஒரு சந்தேகநபரிடமிருந்து 12 கிராம் 260 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 24 மற்றும் 38 வயதுடைய கிராந்துருகோட்டே மற்றும் மஹவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
வலான ஊழல் ஒழிப்பு அதிரடிப்படையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய, இதற்குத் துணையாக இருந்த மற்றொரு சந்தேகநபரை காலி பிராந்திய குற்ற புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹபராதுவ – கல்பே பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவராவார்.
காலி பிராந்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.










