கண்டி – உலகளாவிய நெருக்கடிகளை அரசை வீழ்த்த பயன்படுத்த முயல்கிற எதிர்க்கட்சிகள், மக்களின் அன்றாட சேவைகள் குறித்து கவலை காட்டுவதில்லை என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுடன் கருத்து பகிர்ந்த அவர், “சர்வதேச ரீதியில் நிலவும் போர்ச் சூழல் எப்போது முடிவடையும் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் வலுசக்தியை வரையறைகளுடன் பயன்படுத்துவது புத்திசாலித்தனமானது.
அன்றாட சேவைகளை முடக்குவது தீர்வு அல்ல. மார்ச் முதலாம் திகதிக்குப் பிறகு எரிபொருள் கொள்வனவு வழமைவிட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இவ்வாறான அநாவசிய சேமிப்புகளை குறைத்து வழமையான பயன்பாட்டை தொடர வேண்டும். பொதுச் சேவைகளை கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு திட்டமில்லை” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது, “மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நேரங்களில்எதிர்க்கட்சிகள் ஒன்றிணையவில்லை. டிட்வா புயல் அல்லது தற்போதைய உலகளாவிய போர் நெருக்கடி போன்ற சூழ்நிலைகளை அவர்கள் அரசை வீழ்த்த பயன்படுத்துகிறார்கள். உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பிறகு ஆசனங்களை கைப்பற்றி அதிகாரத்தைப் பிடிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
பொருளாதார மேம்பாடு அல்லது நாட்டின் அபிவிருத்தி குறித்து அவர்களுக்கு கவலை இல்லை. நெருக்கடி நேரங்களில் அதிகாரம் கைப்பற்ற குறுக்கு வழியை தேடுவதே அவர்களின் நோக்கம்”.
“எது எவ்வாறாக இருந்தாலும், ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிப்பதும், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதும் அரசாங்கத்தின் முதன்மை நோக்கம். அரசியல் இலாபம் தேடாமல், இந்த நெருக்கடி காலத்தில் நாட்டுக்காக இணைந்து செயல்பட சகல தரப்பினரையும் அழைக்கின்றோம்” – என்று அவர் வலியுறுத்தினார்.










