பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் அதிகளவான மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் 52 போக்குவரத்து வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
குறித்த நடவடிக்கை வெள்ளிக்கிழமை (26) காலை முதல் இன்று(29) வரை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த சோதனை நடவடிக்கையானது கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமைய அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்தலில் கல்முனை பிராந்திய பதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி டந்த நாராயண நெறிப்படுத்தலில் பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.கஜேந்திரன் தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் பெரியநீலாவணை பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி உட்பட பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவு, ஊழல் ஒழிப்பு பிரிவு, சுற்றாடல் பிரிவு, பெண்கள், சிறுவர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த அதிகாரிகள் உள்ளடங்களாக இதர பொலிஸ் நிலையங்களில் இருந்து விசேட சோதனை நடவடிக்கைக்காக இணைத்து கொள்ளப்பட்ட பொலிஸாரும் கலந்து கொண்டனர்.
அத்துடன் தொடர் திடீர் சோதனை நடவடிக்கையில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், போக்குவரத்து பிரிவு உள்ளிட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகள் பங்கேற்று தத்தமது பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.
இது தவிர பள்ளிவாசல் நிர்வாகத்தின் வீதி ஒழுங்கு முறைகள் குறித்து பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல்கள் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும் சிலரின் சட்டவிரோத நடவடிக்கையினால் மேற்படி தொடர் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது அப்பகுதியில் போக்குவரத்து விபத்துக்களைக் குறைத்தல், போக்குவரத்து விதிமீறல்களைத் தடுத்தல் மற்றும் கண்ணியமான ஓட்டுநர்கள் குழுவை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் தலைக்கவசம் அணியாமை ,சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல், போக்குவரத்து விதிமுறைகளை மீறுதல், மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பற்ற முறையில் பயணித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இவ்வாறு வீதி போக்குவரத்து சட்டங்களை மீறுவோருக்கு எதிராக இவ்வாறான அதிரடி சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக பயணிக்குமாறு வாகன ஓட்டுநர்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்மூலம் இப்பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெறும் பல விபத்துகள், உயிரிழப்புகளை குறைக்கப்படும்.
இன்றைய விசேட நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் சாரதிகளுக்கு எதிராக மிக விரைவில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.கஜேந்திரன் தெரிவித்தார்.
மேலும், இவ் விசேட சோதனை நடவடிக்கையில் 14 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஆபத்து விளைவிக்கும் நோக்குடன் வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிமீறல் மற்றும் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 52 போக்குவரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.













