மன்னார் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த வாரம் பொதுமக்களால் கிடைக்கபெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போது உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையம் ஒன்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மன்னார் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நகரசபை சுகாதார பரிசோதகர் இணைந்து மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது காலாவதியான உணவுப் பொருட்களை காட்சிப்படுத்தியமை, அழுகிய மரக்கறி, பழங்கள் காட்சிப்படுத்தியிருந்தமை, உணவுப் பொருட்களை உரிய வகையில் களஞ்சியப்படுத்தாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிரபல வர்த்தக நிலையம் ஒன்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வர்த்தக நிலையத்தின் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் வர்த்தக நிலையத்திற்கு ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் கைப்பற்றப்பட்ட உணவுப் பொருட்களையும் உடனடியாக அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் மன்னார் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நகரசபை சுகாதார பரிசோதகர் மற்றும் நகரசபை ஊழியர்கள் இணைந்து குறித்த உணவுப் பொருட்களை மீண்டும் எந்த ஒரு தேவைக்கும் பயன்படுத்த முடியாத வகையில் அழித்தனர்.
மேற்படி 13 இலட்சம் ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன் மன்னார் சுகாதாரத்துறை தொடர்ச்சியாக இவ்வாறான நடைமுறைகளை மேற்கொண்டதுடன் தொடர்ச்சியாக உணவகங்களின் சுகாதாரம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.













