காலியிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த ‘காலி குமாரி’ கடுகதி ரயிலுடன் கப் ரக வாகனமொன்று மோதி விபத்துக்குள்ளானதில், இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் பயாகலை பகுதியில் அமைந்துள்ள ரயில் கடவையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
ரயிலுடன் மோதிய கப் வாகனம், தண்டவாளத்தில் சுமார் 50 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு உருக்குலைந்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மூவர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 22 மற்றும் 28 வயதுடைய இரண்டு இளைஞர்களே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்பதைப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விபத்துக்குள்ளான வாகனம் அருகில் உள்ள கட்டுமானத் திட்டமொன்றில் பணிபுரியும் ஒருவருக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ரயில் கடவையில் பொருத்தப்பட்டுள்ள சமிஞ்சை கட்டமைப்பு நீண்டகாலமாகச் சரியாக இயங்கவில்லை எனவும், அங்கு முறையான பாதுகாப்பு கேட்கள் பொருத்தப்படவில்லை எனவும் பிரதேச மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இந்தச் சமிஞ்சை விளக்குகள் சரியாகச் செயற்படாததே விபத்துக்கான பிரதான காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து காரணமாக இன்று காலை கரையோர மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து சில மணிநேரம் வரை தாமதமடைந்தது.
சம்பவம் தொடர்பில் பயாகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










