சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றின் படுக்கையறையில் பயணப்பையில் இருந்து மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சீதுவை, முகலங்கமுவ பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்தே இந்தச் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த வீட்டின் பகுதியிலிருந்து திடீரெனக் கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து, சந்தேகமடைந்த பிரதேச மக்கள் இது குறித்து சீதுவை பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தினர்.
இதன்போது, அங்குள்ள படுக்கையறையில் வைக்கப்பட்டிருந்த பயணப்பொதி ஒன்றுக்குள் சடலம் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
உயிரிழந்தவர் முகலங்கமுவ பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய மூதாட்டி என்றும், அவர் அந்த வீட்டில் நீண்டநாட்களாகத் தனியாகவே வசித்து வந்துள்ளார் என்றும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இப்படுகொலையைச் செய்த அடையாளம் தெரியாத சந்தேகநபர்கள், மிகவும் திட்டமிட்ட முறையில் கொலையை அரங்கேற்றியுள்ளனர்.
பொலிஸாரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமராக்களைக் கழற்றி அகற்றியுள்ளதுடன், வீட்டின் தொலைபேசிக் கம்பிகளையும் துண்டித்துவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக நீதிவான் விசாரணைகளும், சடலம் மீதான பிரேத பரிசோதனைகளும் இன்று முன்னெடுக்கப்பட்டன.
படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ள சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகச் சீதுவை பொலிஸார் பல கோணங்களில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










