எதிர்வரும் 27ஆம், 28ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன என்று யாழ்ப்பாண மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
“கச்சதீவுப் பெருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன. எதிர்வரும் 27ஆம் திகதி மாலை நற்கருணைப் பெருவிழாவும், மறுநாள் காலை திருவிழாத் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படும். இந்த விழாவுக்கான பயண ஒழுங்குகள் அனைத்தும் மிக நேர்த்தியாகச் செய்யப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து, எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் கச்சதீவுப் பெருவிழாவுக்குச் செல்லவும் பயணிகளுக்கான குறிகாட்டுவான் நோக்கிய பேருந்து சேவை இடம்பெறும். பகல் ஒரு மணிவரை இந்தச் சேவைகள் முன்னெடுக்கப்படும். அதன் பின்னர் குறிகாட்டுவானில் இருந்து கச்சதீவுக்கு எந்தப் படகுச் சேவையும் இடம்பெறாது.
குறிகாட்டுவானிலிருந்து கச்சதீவுக்கு படகுச் சேவைக்கான ஒருவழிக் கட்டணமாக ரூபா ஆயிரத்து 200 ரூபா அறவிடப்படும்.
நெடுந்தீவிலிருந்து கச்சதீவுக்கான ஒரு வழிக்கட்டணமாக ஆயிரம் ரூபாய் அறவிடப்படும்.
இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான தங்குமிட வசதிகள், கூடாரங்கள், உணவு வசதிகள், பாதுகாப்பு, சுகாதாரத் தேவைகள், மலசலகூட வசதிகள், குடிதண்ணீர் தேவைகள், பாதுகாப்பு, ஒலி – ஒளி வசதிகள், கடல் மற்றும் தரைப் போக்குவரத்து ஒழுங்குகள், தனியார் கடற்போக்குவரத்து படகுகளின் கட்டண நிர்ணயம், கழிவு முகாமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
கச்சதீவுக்குச் செல்லும் பக்தர்களுக்கு 27ஆம் திகதி இரவு உணவு வழங்கப்படாது. 28ஆம் திகதி காலை உணவு இலவசமாக வழங்கப்படும்.” – என்றார்.










