பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ‘புஷ்பா’ திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகு பான் இந்தியா நடிகராக உயர்ந்துள்ளார். திரைப்படங்களுடன் விளம்பரங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.இந்நிலையில், ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் பிராண்ட் உத்தி குழுவில் பணியாற்றி வந்ததாகக் கூறப்படும் காவேரி பருவா என்ற நபர், விளம்பரத் தொடர்பாக அல்லு அர்ஜுனை சந்திக்க முன் கடைப்பிடிக்க வேண்டிய 42 கடுமையான விதிமுறைகள் உள்ளதாக தெரிவித்திருந்தார்.
அந்த விதிகளில், “நேரடியாக கண்களை பார்க்கக் கூடாது, கைகுலுக்கக் கூடாது, அனுமதியின்றி பேசக் கூடாது, இடையில் நகரக் கூடாது” போன்ற கட்டுப்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து பெரும் சர்ச்சை எழுந்தது.இதன் பின்னர் சமூக வலைதளங்களில் அல்லு அர்ஜுனை விமர்சிக்கும் மற்றும் கேலிச்செய்யும் பதிவுகள் அதிகரித்தன.
இந்நிலையில், அல்லு அர்ஜுன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குறித்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றதும் உண்மைக்கு புறம்பானதுமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அறிக்கையில் மேலும், “அல்லு அர்ஜுன் எப்போதும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடந்து கொள்பவர்.
இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுகளை தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். இதற்குக் காரணமானவர்களுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர எங்கள் சட்டக் குழு தயாராக உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த விவகாரம் தொடர்பில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதம் நிலவி வருகிறது.









