அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானில் அயதுல்லா அலி கமேனியின் 37 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்லாமிய குடியரசை சவால் செய்யும் போராட்டங்கள் அமெரிக்க இராணுவ பதிலடி அச்சுறுத்தல்களைத் தூண்டியதைத் தொடர்ந்து புதிய தலைமைக்கான நேரம் இது என்று கூறியுள்ளார்.கடந்த இரண்டு வாரங்களாக ஈரான் முழுவதும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவரது இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக இராணுவத் தலையீட்டை ட்ரம்ப் பலமுறை வலியறுத்தி வந்தார்.ஈரானியர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என்றும் அதே நேரத்தில் “உதவி வந்து கொண்டிருக்கிறது” என்று ட்ரம்ப் கடந்த சில் நாட்களுக்கு முன் குறிப்பிட்டிருந்தார்.இரண்டு நாட்களுக்கு முன்பு 800இற்கும் மேற்பட்டவர்களை தூக்கிலிடாமல் இருந்ததுதான் அவர் எடுத்த சிறந்த முடிவு” என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.
இந்நிலையில், ஈரானில் வெடித்த வன்முறை சம்பவங்கள் அனைத்திற்கும் ட்ரம்பும் இஸ்ரேலும் முதன்மையான காரணம் என கமேனி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போராட்டக்காரர்களைத் தூண்டிவிடுவதாகவும், ஈரானை விழுங்குவதே அமெரிக்காவின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், கமேனி மற்றும் ஈரானின் தலைமையையும் ட்ரம்ப் கண்டித்ததோடு, “அந்த மனிதர் ஒரு நோய்வாய்ப்பட்ட மனிதன், அவர் தனது நாட்டை முறையாக நடத்த வேண்டும், மக்களைக் கொல்வதை நிறுத்த வேண்டும். மோசமான தலைமை காரணமாக அவரது நாடு உலகிலேயே வாழ்வதற்கு மிகவும் மோசமான இடம் என்று அழைக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.










