கடந்த 24 மணித்தியாலங்களில் 26 வணிகக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிப்பதற்கு தாம் ஒருங்கிணைப்பு செய்துள்ளதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
ஈரானின் அதிகாரப்பூர்வ ISNA செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து அனைத்தும் ஈரான் கடற்படையின் அனுமதி மற்றும் ஒருங்கிணைப்புடன் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த 26 கப்பல்களில் எண்ணெய் கப்பல்கள் மற்றும் கொள்கலன் கப்பல்களும் அடங்கும் என்பதுடன், சமீபத்தில் தென் கொரிய எண்ணெய் கப்பல் ஒன்றும் இதன் வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பிறகு, ஹோர்முஸ் நீரிணையில் விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்த எண்ணிக்கை ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பாக கருதப்படுகிறது.
இதேவேளை, ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள ஈரான், வணிகக் கப்பல்கள் தங்களின் பாதுகாப்புக்காகவும், உள்கட்டமைப்பைப் பராமரிப்பதற்காகவும் புதிய “பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டணங்களை” (Transit fees) செலுத்த வேண்டும் என்றும், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் நேரடி அனுமதியைப் பெற வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தியுள்ளது.










