இலங்கை மற்றும் மாலைதீவின் உலக வங்கி வதிவிடப் பிரதிநிதி ஜெவோர்க் சார்க்ஸ்யன் மற்றும் உலக வங்கித் தூதுக் குழுவினர் தலைமையில், இன்று (30) மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இதில் தொழிற்றுறை அமைச்சர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, கிராமிய அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ச, திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்கள், கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலின் முக்கிய அம்சங்கள் கலந்துரையாடப்பட்டன. இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக் குறிக்கோள்களை அடைவதற்காக உலக வங்கியின் ஆதரவை எவ்வாறு பெறலாம் என்பது குறித்து மிக விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா, விவசாயம், மீன்பிடி, உட்கட்டமைப்புகள் என்ற துறைகள் குறுகிய காலத்தில் பலனளிக்கக்கூடியவை என அடையாளம் காணப்பட்டு, அவை மேம்படுத்தப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
புதிய முதலீடுகளை நாட்டிற்குள் இழுக்கும் வகையில் சட்டரீதியான வடிவமைப்பு ஒன்றை உருவாக்கும் அரசாங்க நடவடிக்கைகள் மற்றும் அதனை ஆதரிக்கும் கொள்கை வழிகாட்டுதல்கள் பற்றியும் உலக வங்கியினர் தெரிவித்தனர்.
உலக வங்கியின் கடனுதவியின் ஆரம்ப கட்ட திட்டங்கள் குறித்தும் பேசப்பட்டது.
இச்சந்திப்பின் மூலம் கிழக்கு மாகாண அபிவிருத்தி, பொதுப் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு மற்றும் நடவடிக்கை கூட்டுத் திட்டங்கள் குறித்து தெளிவான தீர்வுகள் பெறப்பட்டுள்ளன.















