மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் காணியொன்றை அடைக்க முற்பட்ட குழுவினரை அப்பகுதி மக்களும் மாநகரசபை முதல்வர், உறுப்பினர்கள் தடுத்த சம்பவம் இன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக சிவம்பாக்கியநாதன் கடமையேற்ற நிலையில் இவ்வாறான சம்பவம் நடைபெறுவதாக மக்கள் அவரின் கவனத்திற்கு கொண்டுவந்ததை தொடர்ந்து உடனடியாக அங்கு சென்ற மாநகர முதல்வர் அங்கு காணி அபகரிப்பு முன்னெடுக்க வந்தாக தெரிவிக்கப்படுவோரிடம் கலந்துரையாடினார்.
பல காலமாக இப்பகுதியில் காணிகளை அடைப்பதற்கு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் அது அப்பகுதி மக்களினாலும் அரசியல்வாதிகளினாலும் தடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்த காணிக்கான ஆவணங்கள் உள்ளதாக தெரிவித்து ஒரு தரப்பினர் இந்த காணியை அடைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ள நிலைவயில் இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றம் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
குறித்த காணியானது வெள்ளம் ஏற்படுகின்ற காலங்களில் கல்லடி பகுதியில் ஏற்படும் வெள்ள நிலைமையினை குறைப்பதற்கான வடிச்சல் பகுதியாக இருந்துவருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்போது அங்குவந்த பொலிஸார் மற்றும் மாநகர முதல்வர், மாநகரசபை பிரதி முதல்வர், உறுப்பினர்கள் கலந்துரையாடி முறையான அனுமதிகள் கொண்ட ஆவணங்கள் இல்லாமல் காணி அடைப்பதை நிறுத்துமாறு பணிப்புரை விடுத்ததுடன் சட்ட நடைமுறைகளை கவனத்திற்கொண்டு செயற்படுமாறும் பணிப்புரை விடுத்தனர்.







