மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையிலிருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன 19 வயது இளைஞனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
கல்முனைக்குடி கடற்பகுதியில் வைத்து தேடுதல் முன்னெடுத்துக்கொண்டிருந்த மீனவர்களினால் சடலம் மீட்கப்பட்டு களுதாவளைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள களுதாவளை சிறி முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய விஜயகுமார் விஜயகாந்த் என்பவர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் கடலில் மீன்பிடிப்பதற்காக சிறிய படகில் தனியாக சென்றுள்ள நிலையில் அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆகியும் வீடு திரும்பவில்லை.
இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை தேடும் பணிகளில் மீனவர்களும் கடற்படையினரும் ஈடுபட்டிருந்தனர்.
மீனவர்கள் சென்று தேடிய போது மீனவரான விஜயகாந்த் சென்ற படகு கண்டுபிடிக்கப்பட்ட போதும் அதில் அவர் காணாமல் போயிருந்த நிலையில் அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இன்று அதிகாலை கல்முனைக்குடிக்கும் கல்முனைக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் அவரது சடலம் மிதத்ததை கண்டு மீனவர்கள் அதனை மீட்டு வந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
சடலத்தின் மீதான விசாரணைகளை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலம் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த இளைஞனின் மரணம் தொடர்பில் குடும்பத்தினரால் பல்வேறு சந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.












