வடக்கில் கரையோர பிரதேசங்களில் காணப்படும் போதைப்பொருள் பாவனை குறித்து இளையோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ
வடக்கில் கரையோர பிரதேசங்களில் காணப்படும் போதைப்பொருள் பாவனை குறித்து இளையோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, போதைப்பொருள் பாவனையில் இருந்து இளையோரை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்தார்.
மன்னார் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘போதைப்பொருள் வேண்டாம் நமது இளையோரை பாதுகாப்போம்’ எனும் தொனிப் பொருளில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (29) மன்னாரில் இடம் பெற்றது.
இதன் போது இளைஞர் யுவதிகள், திணைக்கள அதிகாரிகள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் உள்ள கரையோரப் பகுதிகளை போதைப்பொருட்களின் மையங்களாக இலங்கையில் பார்க்கக்கூடிய விடயமாக இன்று காணப்படுகின்றது.
இந்த போதைப்பொருட்கள் எமது இளையோர், சிறுவர்கள், குறிப்பாக பாடசாலை சமூகத்தை சீரழிக்கக் கூடிய நிலையில் பரந்துபட்டு காணப்படுவதை நாங்கள் ஊடகங்கள் மூலம் பார்க்கின்றோம். போதைப் பாவனையை எவ்வாறு கட்டுப்படுத்துவது, அதில் இருந்து எவ்வாறு எமது இளையோர்களை பாதுகாப்பது என்பது குறித்து நாம் விழிப்புணர்வை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.
அநீதிக்கு எதிராக நாங்கள் எவ்வாறு கூட்டாக குரல் கொடுப்பது எனும் தெளிவை பெற்றுக் கொள்ள வேண்டும். வடக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த விழிப்புணர்வை இளையோர் மத்தியில் முன்னெடுத்து வருகிறோம்.
அதனுடன் தொடர்புபட்டு கடமையாற்றுகின்றவர்களையும் உள்ளடக்கி கூட்டுக் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகிறோம். என அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் போது தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் பசீர் முகமட் றசாக் கலந்து கொண்டு விழிப்புணர்வு கருத்துக்களை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.




