“பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய சட்டமா அதிபர் திணைக்களம் குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்ய முடியும். அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய புதிய அரசமைப்பில் ‘மக்கள் உயிர் வாழும் உரிமை’யை உள்ளடக்க வேண்டும்.”- இவ்வாறு முன்னாள் மனித உரிமை ஆணையாளர் சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹேவா தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பட்டலந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழு தமது அறிக்கையில் பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. விரிவான சாட்சிகள் கோரப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த அரசு பட்டலந்த விசாரணை அறிக்கையின் மூலப் பிரதியை நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பித்துள்ளது.
இந்த அறிக்கையின் பிரகாரம் சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.
பட்டலந்த விசாரணை அறிக்கையில் 1978 ஆம் ஆண்டு அரசமைப்பில் ‘மக்கள் உயிர் வாழும் உரிமை’ உள்ளடக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே உத்தேச புதிய அரசமைப்பு உருவாக்கத்தின்போது ‘மக்கள் உயிர் வாழும் உரிமை’யை உறுதிப்படுத்த வேண்டும்.” – என்றார்.
பட்டலந்த வீட்டுத் தொகுதியில் சட்டவிரோத தடுப்பு முகாம் மற்றும் சித்திரவதை முகாம் அமைத்து அவற்றை நடத்திச் சென்றமை தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையைச் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பித்தார்.
இந்த அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பில் ஆராய்வதற்கு உப குழு ஒன்றை நியமிப்பதற்கும், அடுத்தகட்ட நடவடிக்கைகைள முன்னெடுப்பதற்கு அறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு வழங்குவதற்கும் அரசு தீர்மானித்துள்ளது.
இந்த அறிக்கை தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முதலாவது விவாதத்தையும், மே மாதம் இரண்டாவது விவாதத்தையும் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.