காலி மாவட்டம், பிட்டிகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடாமுன பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக இரத்தக்காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொடாமுன பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக இரத்தக்காயங்களுடன் நபர் ஒருவர் வீழ்ந்து கிடக்கின்றார் என்று பிட்டிகல பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மேற்படி நபரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும்போது அவர் இடைவழியிலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பிட்டிகல, கொடாமுன பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் ஆவார்.
மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் மீதான உடற்கூற்றுப் பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பிட்டிகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.