மோசடியாக தயாரிக்கப்பட்ட விசாவைப் பயன்படுத்தி ஜேர்மனிக்கு செல்ல முயன்ற யாழ்ப்பாண இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் எல்லை நிர்ணய கண்காணிப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – இளவாலை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர், புதுடில்லி சென்று பின்னர் அங்கிருந்து, மற்றுமொரு விமானத்தில் ஜேர்மனி நோக்கி பயணிக்க முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் வழங்கிய ஆவணங்களின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட தொழில்நுட்ப சோதனையில் ஜேர்மனி நாட்டுக்கான விசா போலியானது என தெரியவந்துள்ளது.
எனினும், அவர் தன்னை ஒரு ஜேர்மனி நாட்டை சேர்ந்தவர் என காட்டிக்கொண்டுள்ளதோடு, தனது கடவுச்சீட்டில் காங்கேசன்துறை துறைமுகம் வழியாக சமீபத்தில் நாட்டிற்குள் நுழைந்ததாகக் கூறும் போலி குடியேற்ற முத்திரையையும் வைத்திருந்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இளைஞனைக் கைது செய்து, மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.