உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இலங்கையைப் பாதுகாப்பது தொடர்பில் நிபுணர்களுடன் சஜித் அவசர ஆலோசனை.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
51 பார்வைகள்

உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலாக உருவெடுத்து வரும் ‘எல் நினோ’ மற்றும் ‘லா நினா’ காலநிலை நிலைமைகளால் இலங்கைக்கு ஏற்படும் மோசமான தாக்கங்களைக் குறைத்துக் கொள்வது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சர்வதேச மற்றும் உள்நாட்டு நிபுணர்களுடன் அவசர கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளார்.

இந்த விசேட கலந்துரையாடல் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மெட்ரோபொலிட்டன் விரிவுரையாளர் ஸ்ரீநாத் பெர்னாண்டோ, சுற்றாடல் நிபுணர் கலாநிதி ஸ்பென்சர் வித்தாரண, ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதம பொருளாதார அதிகாரி ஹசிதா விக்கிரமசிங்க மற்றும் உலக வங்கியின் சிரேஷ்ட சுற்றாடல் நிபுணர் நதீர ராஜபக்‌ஷ ஆகியோர் கலந்துகொண்டு தமது ஆலோசனைகளை வழங்கினர்.

அங்கு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் உரையாற்றுகையில்,
“எல் நினோ மற்றும் லா நினா நிலைமைகளால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து நிபுணர்கள் சமர்ப்பிக்கும் முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை, காலநிலை மாற்றம் பற்றிய நாடாளுமன்ற ஒன்றியம் மற்றும் நாடாளுமன்றத்தின் அவசர கவனத்துக்குக் கொண்டு சென்று, நாட்டின் தேசிய கொள்கை நிகழ்ச்சி நிரலில் உள்வாங்க நடவடிக்கை எடுப்பேன். நான் இந்த நாடாளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராகச் செயற்படுவதால், நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக இந்த விவகாரத்தில் பொறுப்புணர்வுடனும் ஆக்கப்பூர்வமாகவும் தலையிடத் தயாராகவுள்ளோம்.

பசிபிக் பெருங்கடலின் நீரின் வெப்பநிலை மற்றும் வளிமண்டல அழுத்த மாறுபாடுகள் காரணமாகவே ‘தெற்கு சுழற்சி’ என அழைக்கப்படும் இந்தக் காலநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. எல் நினோவின் போது கடல் நீர் வழமைக்கு மாறாக அசாதாரணமாக வெப்பமடைகின்றது. ‘லா நினா’வின் போது அது வழமையை விட குளிர்ச்சியடைகிறது. இந்த உலகளாவிய வானிலை மாற்றங்களால் வறட்சி, கடுமையான வெள்ளம், வெப்ப அலைகள், நீர் பற்றாக்குறை மற்றும் உணவு உற்பத்தி வீழ்ச்சி போன்ற பாரிய நெருக்கடிகள் இலங்கையிலும் ஏற்படக்கூடும்.

கடந்த 1982, 1997-1998 மற்றும் 2015-2016 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட ‘எல் நினோ’ நிலைமைகள் காரணமாக சர்வதேச ரீதியாகப் பாரதூரமான காலநிலை நெருக்கடிகள் உருவானதை நாம் மறந்துவிடக் கூடாது. இம்முறை உலக அளவில் ‘சுப்பர் எல் நினோ’ நிலைமை ஏற்படுவது குறித்து சர்வதேச வானிலை ஆய்வாளர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர். அவ்வாறு நிகழ்ந்தால், நடப்பு 2026 அல்லது வரவிருக்கும் 2027 ஆம் ஆண்டுகளில் உலகளாவிய வெப்பநிலை மட்டம் ஆபத்தான குறிப்பிட்ட எல்லையைத் தாண்டக்கூடும் எனப் பல கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த மோசமான வானிலை உலக மக்களின் கலோரி தேவையில் சுமார் 60 வீதத்தைப் பெற்றுத் தரும் அரிசி, கோதுமை, சோளம் மற்றும் சோயா போன்ற முக்கிய பயிர்களின் உற்பத்தியைக் கடுமையாகப் பாதிக்கும். இதன் மூலம் உலக அளவில் மட்டுமன்றி, உள்நாட்டிலும் உணவுப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயர்ந்து பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுகின்றது.

இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் இத்தகைய காலநிலை நெருக்கடிகளை எதிர்கொள்ளும் போது உட்கட்டமைப்பு, நிதி மற்றும் தொழில்நுட்ப ரீதியாகப் பல சவால்களை எதிர்கொள்கின்றன. இதற்காக நாம் இப்போதிருந்தே போதிய தயார் நிலையையும், காலநிலை நெகிழ்ச்சித் திறனையும் அதிகரித்துக்கொள்வது மிக அத்தியாவசியமானதாகும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

34 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

60 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

57 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

60 0 0