கட்சி, இனம், மத பாகுபாடுகளின்றி சகல மக்களினதும் உரிமைகளைப் பாதுகாக்கும் முற்போக்கான புதிய பயணத்தில் தங்களோடு இணைந்து கொள்ளுமாறு சிவில் சமூக அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“நமது நாட்டின் அரசமைப்புக்குள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகிய பிரதான மூன்று தூண்கள் காணப்படுகின்றன. அதேவேளை, சுதந்திர மற்றும் சுயாதீன ஊடகத்துறை அதன் நான்காவது தூணாகவும், ஐந்தாவது தூணாக சிவில் சமூக இயக்கமும் விளங்கி ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் முதன்மைச் சக்தியாக அமைய வேண்டும்.
நமது நாட்டின் ஒட்டுமொத்த சிவில் சமூக இயக்கங்களினதும் அமைப்புகளினதும் தனித்துவமான நோக்கங்கள் எவ்வாறாக அமைந்திருந்தாலும், அவை அனைத்தையும் ஒன்றிணைத்து, ஒரு பொதுவான இலக்கை நோக்கிப் பயணிப்பதே இன்றைய தேவையாகும். ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் இத்தகையதொரு தேசிய பணிக்கான வேலைத்திட்டத்துக்கு நாம் அடித்தளம் அமைப்போம். அதற்கமைய, நாளை திங்கட்கிழமை முற்பகல் 9 மணிக்கு கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் இந்த விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம்.
உரிமைகள் குறித்து ஜனநாயக முறைமையின்படி பேசும்போது, சில தரப்பினர் தாராளவாத வலதுசாரிக் கருத்துக்களைக் கொண்டு, அது சிவில் மற்றும் அரசியல் உரிமைகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்கின்றனர். அதேநேரம், இடதுசாரிப் பிரிவினர் அதன் பெரும்பகுதியைப் பொருளாதார, சமூக மற்றும் நலன்புரி உரிமைகளுக்கே வழங்குகின்றனர். ஆனால், இந்த அனைத்து உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் மூலம் உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாகும்.
எனவே, நடுத்தரப் பாதையைக் கொள்கையாக நம்பும் ஐக்கிய மக்கள் சக்தி, வலதுசாரிகளும் இடதுசாரிகளும் சுட்டிக்காட்டும் அனைத்து உரிமைகளையும் சமமாக முன்னிறுத்தி முன்னோக்கிச் செல்வதே பொருத்தமானது என நம்புகின்றது.
இந்த வேலைத்திட்டத்தில் எவ்வித கட்சிப் பாகுபாடும் கிடையாது. அனைவரினதும் முற்போக்கான கருத்துக்களுக்கும் இதில் உரிய சந்தர்ப்பம் வழங்கப்படும். சிவில் மற்றும் அரசியல் உரிமைகளைப் போன்றே பொருளாதார, சமூக, சுகாதார, கல்வி மற்றும் நலன்புரி போன்ற அனைத்து உரிமைகளுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு பலமிக்க தேசிய அமைப்பை நாம் ஒன்றிணைந்து கட்டியெழுப்புவோம். இதற்காக அனைத்துச் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களையும் எங்களுடன் கைகோர்க்குமாறு அன்போடு அழைக்கின்றேன்.” – என்றார்.










