உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதன் மூலம், தற்போதைய திசைகாட்டி அரசு நீதித்துறைக்குள் நேரடி அரசியல் தலையீடுகளை மேற்கொள்ள முயற்சிக்கின்றது என்று ஊழல் எதிர்ப்பு முன்னணியின் அழைப்பாளர் நிரோஷன் பாதுக்க கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முதன்மைக் காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“நமது நாட்டின் 1972 மற்றும் 1978ஆம் ஆண்டு அரசமைப்புகளின்படி, உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் 65 வயதிலும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஒருவர் 63 வயதிலும் ஓய்வுபெற வேண்டும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், தற்போதைய அரசு இந்த ஓய்வுபெறும் வயதை மேலும் நீடிப்பதற்குத் திடீர் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்தபோது இது குறித்து எந்தவொரு கருத்தையும் வெளியிட்டிருக்கவில்லை.
அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தின்படி, பிரதம நீதியரசர் உள்ளிட்ட உயர்நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை 11 இலிருந்து 19 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை 12 இலிருந்து 20 ஆகவும் அதிகரிக்கப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களில் மட்டும் நீதித்துறை அமைப்பில் 8 நீதியரசர்கள் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த வெற்றிடங்களுக்கான தகுதியான பெயர்களை ஜனாதிபதி இதுவரை அரசமைப்பு சபைக்குப் பரிந்துரைக்கவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில், நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கே ஜனாதிபதி தலைமையிலான அரசு முன்னுரிமை வழங்கி வருகின்றது.
எதிர்வரும் நவம்பர் மாதத்துடன் தற்போதைய பிரதம நீதியரசர் ஓய்வுபெற வேண்டும். ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதாயின், அது ஏன் உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட வேண்டும்? நாட்டின் நீதிவான் நீதிமன்ற நீதிவான்கள், மேல் நீதிமன்ற நீதிபதிகள், மருத்துவர்கள் மற்றும் அரச சேவையின் ஏனைய உயர் அதிகாரிகளின் ஓய்வுபெறும் வயதும் அதிகரிக்கப்பட வேண்டும் அல்லவா?
அரசின் ‘பொற்கால நாடொன்று – அழகான வாழ்க்கையொன்று’ கொள்கைப் பிரகடனத்தில், புதிய அரசமைப்பொன்று கொண்டுவரப்படும் எனக் கூறப்பட்டு, அதன்கீழ் 16 பிரதான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆனால், அதில் பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை அல்லது வயதை நீடிப்பது குறித்து எங்கும் குறிப்பிடப்படவில்லை. இலங்கையின் வரலாற்றில் இதற்கு முன்னர் இருந்த எந்தவொரு ஜனாதிபதியும் பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நீடிப்பதற்குத் தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்ததில்லை. நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும் என இவர்களது கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதனைச் செய்யாமல் தட்டிக் கழித்து வருகின்றார்.
பிரதம நீதியரசர் ஓய்வுபெறுவதால் நாட்டின் நீதித்துறை கட்டமைப்பு ஒருபோதும் வீழ்ச்சியடைந்துவிடாது. ஆனால் அவரது பதவிக்காலத்தை அரசியல் தேவைகளுக்காக நீடிப்பது நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்குக் கடுமையான மற்றும் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும். தற்போது நீதித்துறை முறைமையானது அரசியல்மயப்படுத்தப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நீடிக்க வேண்டிய தேவை நாட்டு மக்களுக்கு இல்லை, அது தற்போதைய அரசுக்கே உள்ளது.
அரசின் கொள்கைப் பிரகடனத்தில் உள்ள விடயங்களைச் செயல்படுத்துவதற்காகவே மக்கள் இந்த அரசுக்குப் பெரும்பான்மை பலத்தை வழங்கினார்களே தவிர, அரசமைப்பைத் திருத்தி நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அல்ல. எனவே, ஜனாதிபதியும் அரசும் நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு விடுக்கும் இந்த சவால்களுக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தியும் அதன் சட்டத்தரணிகள் சங்கமும் இணைந்து சட்ட ரீதியான மற்றும் அரசியல் ரீதியான அனைத்துப் போராட்டங்களையும் நாடெங்கிலும் முன்னெடுக்கும்.” – என்றார்.










