சுதேச மருத்துவ சேவையில் பதிலீடு இன்றி வழங்கப்பட்ட இடமாற்றங்களால் ஏற்பட்டுள்ள மருத்துவர்கள் பற்றாக்குறையை சுட்டிக்காட்டி, அவற்றுக்கு உடனடி தீர்வு வழங்குமாறு வடமாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்கள ஆணையாளர் தில்லையம்பலம் சர்வானந்தனிடம் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் 2026.06.16 இன்று வடமாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்கள ஆணையாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் குறித்த கடித்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
2025 ஆம் ஆண்டிற்கான இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவையின் வருடாந்த இடமாற்றங்களில் பதிலீடு இன்றி வழங்கப்பட்ட 77 இடமாற்றங்களில் 17 இடமாற்றங்கள் வன்னி மாவட்டத்தைச் சார்ந்ததாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய பதிலீடு இன்றிய இடமாற்றங்களினால் உருவான வெற்றிடங்களை நிரப்புவதற்காக உடனடி பதிலீடுகளை வழங்க வேண்டும் என்றும், அல்லது முன்னதாக தீர்மானிக்கப்பட்டபடி ஒப்பந்த அடிப்படையில் புதிய சுதேச மருத்துவர்களை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், 2026.04.29 அன்று நடைபெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலும், 2026.06.03 அன்று நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலும், குறித்த பதிலீடுகளை விரைவாக வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்திருந்த போதிலும், இதுவரை அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து, வடமாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்கள ஆணையாளர் மற்றும் வடமாகாண பிரதம செயலாளர் ஆகியோரால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைவாக மேலும் காலதாமதமின்றி வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ள சுதேச மருத்துவர்களின் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், மேற்கொள்ளப்படும் இடமாற்றங்கள் மற்றும் பதிலீடுகள் தொடர்பான இற்றைப்படுத்திய அறிக்கையையும் வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இக்கடிதம் வடமாகாண ஆளுநர், பிரதம செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கும் பிரதியாக அனுப்பப்பட்டுள்ளது.










