சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில், சேற்று நிலமொன்றில் புதைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணொருவரின் உடலம், தெல்தெனிய – ரங்கல பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இக்கொலைச் சம்பவம் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பே நடத்தப்பட்டிருக்கலாம் எனவும், உடலத்தை மறைக்கும் நோக்கில் சேற்று நிலத்தில் சுமார் மூன்று அடி ஆழமான குழி தோண்டப்பட்டு அது புதைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தின் பின்னர் உயிரிழந்த பெண்ணுடன் தங்கியிருந்த அவரது ஆண் நண்பர் தப்பியோடியுள்ளதால், அவரே இக்கொலைச் சம்பவத்தைச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த சந்தேகநபர் தனது மனைவியைப் பிரிந்து, சுமார் நான்கு வருடங்களாக உயிரிழந்த பெண்ணுடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளமை சந்தேகநபரின் தாயார் வழங்கிய வாக்குமூலத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.
சந்தேகநபர் சில நாட்களுக்கு முன்னர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று, உயிரிழந்த பெண்ணைத் தனது மனைவி எனக் கூறி, அவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.
அத்துடன் குறித்த பெண்ணுக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாகவும் அந்த முறைப்பாட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்த பின்னர், முறைப்பாட்டாளரான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார்.
இதனையடுத்து, அவரது தாயாரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் போதே இந்த உண்மைகள் தெரியவந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரங்கல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.










